Last Updated : 01 Jun, 2018 05:42 PM

 

Published : 01 Jun 2018 05:42 PM
Last Updated : 01 Jun 2018 05:42 PM

ரூ.5 கோடி வரை பரிசு: பினாமி சொத்து குறித்து வருமானவரித் துறைக்கு தகவல் அளித்தால் வெகுமதி

பினாமி பரிவர்த்தனை அல்லது பினாமி சொத்துக்கள் குறித்து வருமானவரித்துறையினருக்கு ரகசிய தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. ஒரு கோடி முதல் ரூ.5கோடி வரை பரிசுகள் வழங்கப்படும் என்று மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

பினாமி சொத்து என்றால் என்ன?

பினாமி சொத்து என்பது, ஒரு தனிநபரால் வாங்கப்படும் சொத்து அவரின் பெயரில் பதிவு செய்யப்படாமல் வேறு ஒருநபர் அல்லது பெண் பெயரில் பதிவு செய்யப்பட்டு உண்மையான உரிமையாளரின் பெயர் மறைக்கப்படுவதாகும். அந்த மறைமுக உரிமையாளர் மனைவி, குழந்தைகளாகவோ அல்லது நண்பர்களாகவோ அல்லது உறவினர்களாகவோ இருக்கலாம். அரசுக்கு வரி ஏய்ப்பு செய்து, கறுப்புப்பணத்தின் மூலம் அல்லது முறைகேடான வருமானத்தில் மறைமுக உரிமையாளர் பெயரில் வாங்கப்படுவது பினாமி சொத்தாகும்.

இது குறித்து நிதி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

பினாமி சொத்துக்கள் வைத்திருப்பவர்கள் அல்லது பினாமி பணப்பரிமாற்றம் செய்பவர்களை அடையாளம் கண்டு வருமானவரித்துறைக்கு பொது மக்கள் தகவல் அளிக்கலாம். ரகசிய தகவல் அளிப்பவர்களுக்கு வருமானவரித்துறையின் தகவல் அளிப்போர் வெகுமதி திட்டம் மூலம் பணப்பரிசு அளிக்கப்படும். பினாமி சொத்துக்கள், பரிமாற்றங்கள் குறித்து ரகசிய தகவல் அளிப்பவர்களுக்கு இதற்கு முன் ரூ.50 லட்சம் வரை மட்டும் பரிசு அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அந்த பரிசுவழங்கப்படும் தொகையின் அளவுக்கு ரூ. ஒரு கோடி முதல் ரூ.5 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கான திருத்தம் வருமானவரிச்சட்டசத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதாவது உள்நாட்டில் பினாமி சொத்துக்கள், பினாமி பரிமாற்றங்கள் குறித்து நம்பகமான தகவல் அளிப்பவர்களுக்கு ரூ. ஒரு கோடி வரையிலும், வெளிநாட்டில் பினாமி சொத்துக்கள், பரிமாற்றம் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.5 கோடி வரையிலும் பரிசு வழங்கப்படும் என மத்திய நேர்முக வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தில் கீழ் எந்தத் தனிநபரும், வெளிநாட்டினரும் இந்தியர்கள் குறித்த பினாமி சொத்துக்கள், பரிமாற்றம் குறித்து வருமானவரித்துறை இணை ஆணையர் அல்லது கூடுதல் ஆணையர்களிடம் தகவல் அளிக்கலாம்.

தகவல் அளிக்கும் மக்களின், நபர்களின் விவரங்கள், அடையாளங்கள், முகவரி ஆகியவை ரகசியம் காக்கப்படும். எத்தகைய சூழலிலும் தகவல் அளிப்பவரின் முகவரி குறித்த விவரங்கள் வெளியிடப்படாது. இந்தத் திட்டம் என்பது பினாமி சொத்து, பரிமாற்றம் குறித்து தகவல் அளிப்பவர்களை ஊக்கப்படுத்துவதற்காகவும், கறுப்புப்பணம், பினாமி சொத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கத்துக்காக மட்டுமேதான்.

வெளிநாட்டில் இந்தியர்கள் பதுக்கி இருக்கும் கறுப்புப்பணம், பினாமி சொத்துக்கள் குறித்து தகவல் அளித்தால் கறுப்புப்பணம் மற்றும் வருமானவரிச்சட்டத்தின் கீழ் தகவல் அளிக்கும் வெளிநாட்டினர் அல்லது இந்தியர்களுக்கு ரூ 5 கோடிவரை பரிசு அளிக்கப்படும்

இவ்வாறு மத்திய நேர்முக வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x