Published : 01 Jun 2018 08:40 AM
Last Updated : 01 Jun 2018 08:40 AM

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத தலைவர் சலாவுதீன் மகன் யூசுப்பின் ஜாமீன் மனு நிராகரிப்பு

ஹிஸ்புல் முஜாகிதீன் தலைவர் சையது சலாவுதீன் மகன் சையது ஷாகித் யூசுப் ஜாமீன் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்தது.

தீவிரவாத செயல்களுக்கு நிதி திரட்டியது தொடர்பாக ஷாகித் யூசுப்பை டெல்லிக்கு அழைத்து விசாரித்த என்ஐஏ, கடந்த ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி அவரை கைது செய்தது.

இந்நிலையில் தனக்கு சட்டப்பூர்வ ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தில் ஷாகித் யூசுப் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதற்கு எதிராக ஷாகித் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.முரளிதர், ஐ.எஸ்.மேத்தா ஆகியோர் கொண்ட அமர்வுமுன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை நீதிமன்ற உத்தரவை நீதிபதிகள் உறுதி செய்தனர். ஒருவர் கைது செய்யப்பட்ட பிறகு குறிப்பிட்ட நாட்களுக்குள் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 167-ன் கீழ் அந்நபர் சட்டப்பூர்வ ஜாமீன் கோரலாம்.

ஆனால் விசாரணை காலவரம்பு ஏப்ரல் 21 வரை நீட்டிக்கப்பட்டு அதற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் இந்தப் பிரிவின் கீழ் ஜாமீன் கோர முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

காஷ்மீரில் வன்முறை செயல்களுக்காக பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியாவில் இருந்து ஹவாலா வழியில் பணம் பெற்ற இந்த வழக்கில் கடந்த 2011-ல் 4 பேர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இவர்கள் நால்வரும் சிறையில் உள்ளனர். - ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x