Published : 01 Jun 2018 08:37 AM
Last Updated : 01 Jun 2018 08:37 AM
‘‘ராணுவ போக்குவரத்து விமானத்துக்கான உதிரிபாகங்கள் கொள்முதல் செய்ததில், பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் லஞ்சம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று பிரதமர் நரேந்திர மோடியை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த உக்ரைன் நாட்டிடம் இருந்து ஏஎன்-32 ரக ராணுவப் போக்குவரத்து விமானங்களை இந்தியா வாங்கி உள்ளது. இந்த விமானங்களுக்குத் தேவையான உதிரிபாகங்களைக் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் ஏற்பட இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகளுக்கு ரூ.17.55 கோடி அளவுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக நாளிதழ் ஒன்றில் பரபரப்பு செய்தி வெளியானது. இதுகுறித்து உக்ரைன் அரசு விசாரணை நடத்தி வருவதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாளிதழ் செய்தியை ட்விட்டரில் மேற்கோள் காட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், ‘‘பாதுகாப்புத் துறையில் லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏஎன்-32 ஒப்பந்தத்துக்காக உக்ரைனில் இருந்து துபாய் வழியாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கோடிக்கணக்கான ரூபாய் பெற்றுள்ளதாக ஊடகங்களில் பகிரங்கமாக செய்திகள் வெளியாகி உள்ளன. எனவே, சம்பந்தப்பட்டபாதுாப்புத் துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
‘பிஜேபி டிபன்ஸ் ஸ்கேம்’ என்று ஹாஷ்டேக் மூலம் ட்விட்டரில் ராகுல் இவ்வாறு கூறியுள்ளார்.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT