Published : 01 Jun 2018 08:30 AM
Last Updated : 01 Jun 2018 08:30 AM
கர்நாடகாவில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட பெங்களூருவின் ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது.
கர்நாடகாவில் கடந்த மே 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், பெங்களூருவில் உள்ள ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர் அட்டைகள் சிக்கியதால், அந்தத் தொகுதியில் மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, ராஜராஜேஸ்வரி தொகுதிக்கு கடந்த 28-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கியது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்னா, ஒரு லட்சத்து 8,064 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் துளசி முனிராஜு கவுடாவைக் காட்டிலும் 25,492 வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளார்.
இத்தேர்தலில் துளசி முனிராஜு கவுடா 82 ஆயிரத்து 572 வாக்குகளையும், மஜத வேட்பாளர் ராமசந்திரா 60 ஆயிரத்து 380 வாக்குகளையும் பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் எம்எல்ஏ சித்து நியாம கவுடா சாலை விபத்தில் பலியானது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT