Published : 04 May 2018 12:24 PM
Last Updated : 04 May 2018 12:24 PM

காயம்பட்ட கரடியுடன் செல்பி: இளைஞருக்கு நேர்ந்த பரிதாப முடிவு - போராடிய நாய்; வேடிக்கை பார்த்த மக்கள்

ஒடிசா மாநிலம், நபரங்பூர் மாவட்டத்தில் காட்டுப்பகுதியில் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞரைக் கரடி கடித்துக் குதறியதில் அவர் பலியானார்.

ஒடிசாவின் தெற்குப்பகுதி மாவட்டம் நபரங்பூர். இங்குள்ள பாப்படஹன்டி நகரத்தைச் சேர்ந்தவர் பிரபு பத்ரா. இவர் டிரால்வ்ஸ் நடத்தி வந்தார். இந்நிலையில், புதன்கிழமை ஒரு திருமணக் கோஷ்டியை அழைத்துக்கொண்டு தனது வாகனத்தில் கோடபாட் எனும் நகருக்குச் சென்றுவிட்டு, அங்கிருந்து மீண்டும் பாப்படஹன்டிக்கு திரும்பிக்கொண்டிருந்தார். வாகனத்தைப் பிரபு பத்ரா ஓட்டிச் சென்றார்.

அப்போது காட்டுப்பகுதியில் திருமணக்கோஷ்டியினர் அனைவரும் இயற்கை உபாதைகளுக்காக இறங்கினார்கள். டிரைவர் பிரபு பத்ரா காட்டுப்பகுதிக்குள் உள்ள ஒரு குளத்தில் இறங்கி தண்ணீர் குடிக்கச் செல்ல முயன்றபோது வழியில் ஒரு கரடி காயத்துடன் படுத்திருந்தது.

இதைப் பார்த்த பிரபு பத்ரா கரடி தூங்கிக்கொண்டிருப்பதாக நினைத்து அந்தக் கரடியுடன் செல்பி எடுக்கப் பிரபு பத்ரா முயன்றார். ஆனால், பிரபு பத்ரா கரடியுடன் செல்பி எடுக்க அருகே சென்றவுடன், கரடி பிரபு பத்ரா மீது பாய்ந்தது. கரடியின் பிடியில் இருந்து விடுபட பிரபுபத்ரா கடுமையான முயன்று போராடினார். ஆனால், கரடி அவரை கடித்துக் குதறியது.

பிரபு பத்ராவின் சத்தம் கேட்டு திருமண கோஷ்டியினர் காட்டுப்பகுதிக்கு வந்து கரடியிடம் இருந்து பத்ராவை மீட்க முயன்றனர். கரடி மீது கற்களை எறிந்தும், கட்டையால் அடித்தும் பத்ராவை மீட்க முயன்றனர் ஆனால், கரடியின் தாக்குதலில் பத்ரா சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து வனத்துறை ரேஞ்சர் தனுர்ஜெயா மெகாபத்ரா கூறுகையில், கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற பத்ரா சம்பவ இடத்திலேயே பலியானார். இந்தத் தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில்தான் வனத்துறை அலுவலகம் அமைந்திருந்தது. இந்தத் தகவல் கிடைத்து அங்குச் சென்ற வனத்துறையினர் பத்ராவின் உடலை மீட்டு, போலீஸுக்கு தகவல் கொடுத்தோம்.

கரடி பத்ராவைத் தாக்கும் போது அனைத்துப் பயணிகளும் கரடியை தாக்கி இருந்தால்,பத்ரா உயிர் பிழைத்திருப்பார். ஆனால் ஒருசிலர் மட்டுமே கரடி மீது கற்களை வீசி எறிந்தனர். மற்றவர்கள் தங்கள் செல்போனில் வீடியோ எடுப்பதிலேயே ஆர்வமாக இருந்ததால் ஒரு உயிர் பலியானது. அந்தப் பகுதியில் இருந்த ஒரு நாய்கூட கரடியுடன் சண்டையிட்டது ஆனால், அதற்கும் பலனில்லை.

பத்ராவின் இறுதிச்சடங்குக்கு முதல்கட்டமாக ரூ.30 ஆயிரம் வனத்துறை சார்பில் அளித்துள்ளோம். அடுத்த 15 நாட்களில் அரசிடம் இருந்து இழப்பீடு பெற்றுத்தரப்படும். கடந்த மாதம் இதேபோல எச்சரிக்கையை மீறி வனப்பகுதிக்குள் சென்ற 3 பேரைக் கரடி கடித்துக்குதறிக் கொன்றது, 6 பேர் காயமடைந்தனர் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x