Published : 04 May 2018 09:15 AM
Last Updated : 04 May 2018 09:15 AM
உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட பயங்கர புழுதிப் புயலுக்கு 114 பேர் பலியாகியுள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். நிலைமையை சீர்செய்யும் பணிகளில் பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களை நேற்று முன்தினம் இரவு கடுமையான புழுதிப் புயல் தாக்கியது. பலத்த மழையும் கொட்டியது. புயலின் வேகம் அதிகமாக இருந்ததால், ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மாநிலங்களின் பெரும்பாலான பகுதி கள் இருளில் மூழ்கின.
இது மக்களிடையே பீதியைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான், உத்திரப்பிரதேசத்தைத் தாக்கிய திடீர் தூசிப்புயலுக்கான காரணங்களை நிபுணர்கள் சிலர் அலசுகின்றனர்.
ஹரியாணாவில் ஏற்பட்டுள்ள புயற்காற்றுச் சுழற்சி இந்த தூசுப்புயலுக்கு பெரும்பாலும் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. காற்றின் வேகம்தான் அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது மணிக்கு 100கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசியுள்ளது.
கடுமையான காற்று சுற்றி சுற்றி அடித்ததால் வீடுகள் சில இடிந்து விழுந்துள்ளன, மின்கம்பங்கள், மரங்கள் வேரோடு சாய்ந்தன. இந்த 2 மாநிலங்களில் மட்டும் இதன் தாக்கம் ஏற்பட அந்த உள்ளூர் மற்றும் புறக்காரணிகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அளவுக்கதிகமான உஷ்ணம், ஈரப்பதம், வளிமண்டலத்தின் ஊசலாட்டம் அல்லது நிலைத்தன்மையின்மை, ஆகியவை இடியுடன் கூடிய பயங்கரக்காற்றுக்குக் காரணம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கூடுதல் தலைமை இயக்குநர் மிருதுஞ்ஜய மொஹாபாத்ரா கூறும்போது, “வடமாநிலச் சமவெளிகளில் 40 டிகிரி செல்சியஸ் வெயில் அடித்து வருகிறது. காற்றில் ஈரப்பதத்துக்கு 2 ஆதாரங்கள் உள்ளன, ஒன்று வடக்குப் பாகிஸ்தானின் மேற்கிலும், ஜம்மு காஷ்மீரிலும் உள்ள காற்றுமண்டல தொந்தரவு, இன்னொன்று வங்காள விரிகுடாவில் கிழக்குக் காற்று. மேற்குப்பக்க தொந்தரவுகளினால் குளிர்க்காற்று காற்ரு மண்டலத்தின் நிலைத்தன்மையைக் குலைத்துள்ளது, ஆனால் தூசிப்புயல் இடியுடன் கூடிய மழை ஆகியவற்றுக்கு ஹரியாணா மீதுள்ள சூறாவளிச் சுழற்சிதான் காரணம், இதனால் இரண்டு மேகத்திரட்சிகள் உருவாகின” என்கிறார்.
இந்த இரண்டு மேகத்திரட்சிகளில் ஒன்று வடக்கு டெல்லியை நோக்கி நகர்ந்தது. தீவிரமான மற்றொன்று அல்வார், ஆக்ரா, தோல்பூர் பெல்ட் பகுதிகளின் மேல் நகர்ந்தன. சில இடங்களில், உதாரணமாக டெல்லியில் மணிக்கு 69 கிமீ வேகத்தில்தான் காற்று வீசியது, ஆனால் பலாவத்தில் 100கிமீ வேகத்துக்கும் மேல் காற்று வீசியது.
ஐஎம்டியின் முன்னாள் இயக்குநர் லஷ்மண் சிங் ராத்தோர் கூறும்போது, “தூசிப்புயலைப் பொறுத்தவரை மேலதிக உஷ்ணத்தினால் மேகங்களில் உள்ள நீர் தரையிறங்கும் முன்னரே ஆவியாகிவிடும். மண்ணும் வறண்டு கிடப்பதால் காற்று நிலத்திலிருந்து 500மீ உயரத்துக்கு மண்ணையும் தூசியையும் கிளப்பிக் கொண்டு நகரும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT