Published : 04 May 2018 07:49 AM
Last Updated : 04 May 2018 07:49 AM

நேதாஜி சிலை சேதம்: கொல்கத்தாவில் பதற்றம்

கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அருகில் உள்ளது நர்கேல்தங்கா பகுதி. இங்குள்ள சிறுவர் பூங்காவில் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மார்பளவு சிலை உள்ளது. இந்தச் சிலையை மர்ம நபர்கள் சிலர் நேற்று சேதப்படுத்தி உள்ளனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இதுகுறித்து உள்ளூர்வாசிகள் கூறும்போது, ‘‘எங்கள் பகுதியில் வன்முறையைத் தூண்டவும் பிரச்சினையை ஏற்படுத்தவும் நேதாஜி சிலையை வேண்டுமென்றே சேதப்படுத்தி உள்ளனர்’’ என்று குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், சிலையை சேதப்படுத்தியவர்களைக் கண்டுபிடித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு உள்ளூர் மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.

போலீஸ் அதிகாரிகள் வந்து அவர்களைச் சமாதானப்படுத்தினர். பின்னர் சிலை சேதப்படுத்தியது குறித்து பார்வர்டு பிளாக் கட்சியினர் அளித்த புகாரை ஏற்று போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதுகுறித்து பார்வர்டு பிளாக் கொல்கத்தா பிரிவு இளைஞர் அணி பொதுச் செயலாளர் சுதீப்தோ பானர்ஜி கூறும்போது, ‘‘புகார் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காவிட்டால், மீண்டும் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்’’ என்றார். தற்போது சேதம் அடைந்த நேதாஜி சிலையை துணியால் மூடி வைத்துள்ளனர்.

பூங்காவில் சேதப்படுத்தப்பட்ட நேதாஜி சிலையை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய கொல்கத்தா மாநகராட்சி சுகாதாரத் துறை டாக்டர் சுபோத் டே திறந்து வைத்தார். அவர்தான் அந்தப் பூங்காவையும் உருவாக்கி அதற்கு நேதாஜி பூங்கா என்று பெயரிட்டவர். இவர் கொல்கத்தா மாநகராட்சி கவுன்சிலராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் சேவை புரிந்தவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x