Last Updated : 04 May, 2018 07:46 AM

 

Published : 04 May 2018 07:46 AM
Last Updated : 04 May 2018 07:46 AM

செங்கோட்டை பராமரிப்பை தனியாரிடம் விடக்கூடாது: வரலாற்று ஆய்வாளர்கள் வலியுறுத்தல் 

டெல்லி செங்கோட்டையை தனியார் பராமரிப்புக்கு விடுவதற்கு மத்திய அரசுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

பாரம்பரிய வரலாற்று சின்னங்களைப் பராமரிக்கும் திட்டத்தின் கீழ் டெல்லியின் செங்கோட்டையை ‘தி டால்மியா பாரத் குரூப்’ எனும் நிறுவனத்திடம் மத்திய அரசு அளித்துள்ளது. அந்நிறுவனத்திடம் ஆண்டிற்கு ரூ.5 கோடி வீதம் பெற்றுக்கொண்டு 5 ஆண்டுகளுக்காக மத்திய அரசு கடந்த வருடம் ஒப்பந்தம் செய்தது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், வரலாற்றாளர்கள், அறிஞர்கள் கொண்ட சஹமத் அமைப்பு, இந்திய வரலாற்று பேரவை ஆகியவை அரசின் முடிவை எதிர்த்துள்ளன.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் வரலாற்று பேரவையின் பொதுச்செயலாளரான அலிகர் முஸ்லீம் பல்கலைகழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியருமான ஷிரீன் மூஸ்வீ கூறும்போது, ‘‘சிமென்ட் தயாரிப்பு நிறுவனமான டால்மியாவிற்கு தொல்பொருள், வரலாற்றுச் சின்னங்களைப் பராமரித்த அனுபவம் கிடையாது. இந்த நிறுவனம் செங்கோட்டையின் கட்டிட அமைப்பை மாற்றுவதற்கும், அதன் மீதான தவறான புரிதலை ஏற்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன. இந்த ஒப்பந்தத்தை தொல்பொருள் ஆய்வகத்தின் மத்திய ஆலோசனைக்குழு ஆராய்வது அவசியம். அதுவரை இந்த பராமரிப்பை டால்மியாவிற்கு அளிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.

டெல்லியில் உள்ள சஹமத் எனும் பொதுநல அமைப்பின் சார்பிலும் விடுக்கப்பட்ட அறிக்கையில், ‘தற்போதைய அரசு நம் நாட்டின் தொல்பொருள் சின்னத்தை பாதுகாப்பதில் தோல்வி அடைந்த உதாரணங்கள் உள்ளன. இதன் ஆதரவாளர்கள் மசூதி என்பதற்காக 450 வருடம் பழமையான சின்னத்தை (பாபர் மசூதி) இடித்து தரைமட்டமாக்கினர். ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கினர் தாஜ்மகால் உள்ளிட்ட முக்கிய மொகலாய வரலாற்று சின்னங்கள் இந்துக்களுக்கு சொந்தமானவற்றை இடித்து கட்டப்பட்டதாகக் கூறி வருகின்றனர். இந்திய தொல்பொருள் ஆய்வகம் சார்பில் அனைத்து வரலாற்று சின்னங்களையும் பாதுகாக்கப்பட வேண்டும். டால்மியா போன்ற தனியார் நிறுவனங்களுக்கு எக்காரணத்தை கொண்டும் அளிக்கக் கூடாது’ எனத் தெரிவித்துள்ளனர்.

சஹமத்தின் அறிக்கையில் வரலாற்றாசிரியர் இர்பான் ஹபீப், கேசவன் வேலுதத், விவியன் சுந்தரம், எஸ்.காளிதாஸ், துர்கா பிரசாத் அகர்வால், பத்திரிகையாளர் ஸ்மிதா குப்தா உள்ளிட்ட 126 பிரபலங்கள் கையொப்பம் இட்டுள்ளனர். இந்திய வரலாற்றுச் சின்னங்களை பராமரிக்க காங்கிரஸ் ஆட்சியிலும் தனியாரிடம் அளிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் அல்போன்ஸ் கூறியுள்ளார். இந்த பட்டியலில் மேலும் பல வரலாற்று தொல்பொருள் சின்னங்கள் தனியாரின் பராமரிப்பில் விடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x