Published : 30 Apr 2018 08:42 PM
Last Updated : 30 Apr 2018 08:42 PM
காஷ்மீர் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது சாதாரண விஷயம், இதைப் பெரிது படுத்தாதீர்கள் என்று காஷ்மீரின் புதிய துணை முதல்வர் கவிந்தர் குப்தா பேசியது அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி 8வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த விவகாரம் நாடுமுழுவதும் பெரியஅதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 3 போலீஸார் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், காஷ்மீர் மாநில அரசில் இன்று அமைச்சரவை மாற்றம் நடந்தது. பாஜக, பிடிபி தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மாநில பாஜக தலைவர் ஜத்பால் சர்மா, ராஜீவ் ஜஸ்ரேஷியா, சுனில் குமார் சர்மா, தேவந்திர குமார், சக்தி ராஜ் பரிகர் ஆகியோர் அமைச்சர்களாக பதவிஏற்றனர்.
துணை முதல்வராக பாஜகவின் கவிந்தர் குப்தா பதவி ஏற்றபின், நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, அவரிடம் காஷ்மீரில் சமீபத்தில் நடந்த சிறுமி பலாத்காரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்குத் துணை முதல்வர் கூறுகையில், காஷ்மீர் சிறுமி பலாத்காரம் விவகாரம் சாதாரண விஷயம். இதை பெரிதுபடுத்தக் கூடாது என்று கூறிவிட்டுச் சென்றார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் நிஜாமிஇந்த விடியோவே சமூக ஊடகங்களில் பகிர்ந்தவுடன் அது வைரலானது.
இதனால், துணை முதல்வர் கவிந்தர் குப்தா ஊடகங்களை அழைத்து மீண்டும் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், காஷ்மீர் சிறுமி பலாத்காரம் விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதை அடிக்கடி பேசக்கூடாது என்பதற்காகவே அப்படிப் பேசினேன். வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கில் அப்படிப் பேசவில்லை. இதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
துணை முதல்வராகப் பதவி ஏற்றுள்ள கவிந்தர் குப்தா ஆர்எஸ்எஸ் அமைப்பின் தீவிரமான ஆதரவாளர் ஆவார். சர்ச்சையில் சிக்குவது கவிந்தர் குப்தாவுக்கு இது முதல்முறை அல்ல, சட்டசபையின் அவைத்தலைவராக இருந்தபோது, ரோஹிங்கியா முஸ்லிம்கள் குறித்து அவதூறாகப் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT