Published : 30 Apr 2018 07:22 PM
Last Updated : 30 Apr 2018 07:22 PM
மத்தியப் பிரதேச மாநிலத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வில் கலந்து கொண்ட இளைஞர்களின் மார்பில் ஜாதியின் பிரிவு எழுதி வைத்ததற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
‘பாஜகவின் ஜாதி மனப்பான்மையை இது காட்டுகிறது’ என்று ராகுல் காந்தியும், ‘அரசியல் லாபத்துக்காகத் தலித்துக்கள் மீது பாஜக காட்டும் பரிவு இதுதான்’ என்று மாயாவதியும் விளாசியுள்ளனர்.
போலீஸ் தேர்வு
மத்தியப் பிரதேச மாநிலம், தார் மாவட்டத்தில் போலீஸ் கான்ஸ்டபிளுக்கான உடல்தகுதித் தேர்வு நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற இளைஞர்களின் உடலில் சாதியின் பிரிவு எழுதி வைத்து உடல் தகுதித் தேர்வு நடந்தது.
மார்பில் ஜாதிப்பிரிவு
அதாவது உடல்தேர்வுக்கு வந்த இளைஞர்களின் மார்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி என்று ஸ்கெட்ச் மூலம் எழுதி வைத்து தேர்வுகள் நடந்தன. இது குறித்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவி வைரலானது, பெரும் கண்டனமும், விவாதமும் நடந்தது. எஸ்டி பிரிவினருக்கு 160 செமீ உயரும், எஸ்சி,ஓபிசி பிரிவினருக்கு 168செ.மீ உயரமும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது குறித்து மாநில போலீஸ் டிஜிபி ரிஷி குமார் சுக்லாவிடம் நிருபர்கள் கேட்டபோது, இதுபோன்ற நடவடிக்கையை ஏதும் நான் செய்யச்சொல்லி உத்தரவிடவில்லை. இது மோசமான செயலாகும், இது தவிர்க்கப்பட்டு இருக்க வேண்டும். அதேசமயம்,உடல்தகுதித் தேர்வில் வெளிப்படைத்தன்மையை வெளிப்பட வேண்டும் என்று நினைத்து இதை செய்திருக்கலாம் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.
ராகுல் காந்தி
இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனத்தையும், இளைஞர்கள் இருவரின் புகைப்படத்தையும் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
பாஜக அரசின் ஜாதிப்பன்மைதான் நாட்டின் இதயத்தை கிழித்துவிட்டது. இளைஞர்களின் மார்பில் எஸ்சி, எஸ்டி என எழுதி வைத்து இருப்பது நாட்டின் அரசியல்சாசனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும். இது ஆர்எஸ்எஸ், பாஜகவின் அப்பட்டமான சிந்தனையாகும். இதுபோன்ற சிந்தனைதான் சிலநேரங்களில் தலித்கள் மீது பாய்ந்து, அவர்களின் உடலில் துடைப்பத்தை கட்டிவிடுவதும், கோயிலுக்குள் நுழையவிடாமல் தடுப்பதையும் காட்டுகிறது. இந்தச் சிந்தனையை நாம் ஒடுக்கி, வெல்ல வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ்
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி. சுப்ரியா சுலே கூறுகையில், இளைஞர்களின் மார்பில் ஜாதியின் பிரிவை எழுதி போலீஸ் தேர்வு நடத்தியது வெட்கப்பட வேண்டியது. பாஜக ஆட்சியில் இன்னும் என்ன அவமானம் நடக்கவேண்டியது இருக்கிறது. உணர்ச்சிகரமான இந்த விஷயம் குறித்து பிரதமர் மோடி கருத்துதெரிவித்து விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கூறுகையில், தலித்களுக்கு எதிராக நடந்திருக்கும் இந்த சம்பவம் பாஜக ஆட்சியில் ஒரு எடுத்துக்காட்டாகும். அரசியல் லாபத்துக்காகத் தலித்கள் மீது பாஜக எவ்வாறு பாசம் காட்டுகிறது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ள முடியும். தலித்கள் மீது அன்பு காட்டும் வேடம் பாஜகவுக்கும், பிரதமருக்கும் பொருந்துமா. பிரதமர் மோடி இந்தச் சம்பவம் குறித்து அறிந்தும்ஏன் இன்னும் மவுனம் காக்கிறார். ஜாதி வெறிப்பிடித்த இந்தச் சம்பவத்தை கடுமையாகக் கண்டிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT