Published : 30 Apr 2018 04:52 PM
Last Updated : 30 Apr 2018 04:52 PM
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து என்னை டிஸ்சார்ஜ் செய்ததில் அரசியல் சதி இருக்கிறது என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பிஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலுபிரசாத் யாதவுக்கு முதல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறையும், 2-வது வழக்கில் இரண்டரை ஆண்டுகள் சிறையும், 3-வது வழக்கில் 5 ஆண்டுகள் சிறையும், 4-வது வழக்கில் 14-வது ஆண்டுகள் சிறையும் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது பிஹாரில் உள்ள பிர்சா முண்டா சிறையில் லாலு பிரசாத் யாதவ் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 17-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக ராஞ்சியில் உள்ள ராஜேந்திரா மெடிக்கல் இன்ஸ்டியூட்டில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை சரியில்லை என்பதால், , அங்கிருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக லாலு மாற்றப்பட்டார்.
அங்கு லாலுபிரசாத் யாதவ் சிகிச்சை பெற்று வந்தார். அவரை இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
இந்நிலையில், லாலுபிரசாத் யாதவின் உடல்நிலை ஓரளவுக்கு குணமடைந்துவிட்டதால், அவரை அங்கிருந்து ராஞ்சிக்கு அனுப்ப எய்ம்ஸ் நிர்வாகம் முடிவு செய்தது. ராஞ்சியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து லாலுவுக்கு சிகிச்சை ஏற்பாடு செய்யப்பட்டது. அவரின் உடல் நிலையும் பயணம் செய்யும் அளவுக்கு முன்னேறிவிட்டதாக எய்ம்ஸ் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதற்கு லாலு பிரசாத் யாதவின் தொண்டர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும் லாலுவின் உடல்நிலை முழுமையாக குணமாகவில்லை, அதுவரை அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கவேண்டும் என்று எய்ம்ஸ் நிர்வாகத்துக்கு லாலுதரப்பில் கடிதம் எழுதப்பட்டது.
ஆனால், அந்த கடிதத்தை ஏற்காத எய்ம்ஸ் நிர்வாகம், லாலு பிரசாத்தை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்தது. மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த லாலு பிரசாத் யாதவ் நிருபர்களிடம் பேசுகையில், என்னை வேண்டுமென்றே, மருத்துவமனையில் இருந்தே டிஸ்சார்ஜ் செய்து இருக்கிறார்கள். இதில் மிகப்பெரிய அரசியல் சதி இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT