Published : 30 Apr 2018 09:00 AM
Last Updated : 30 Apr 2018 09:00 AM
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
சித்தராமையா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன் பாஜக பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அவர்கள் கூறியபடி கறுப்புப் பணம் வெள்ளையாகவில்லை. மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் கிடைக்கவில்லை. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் அவதிப்பட்டனர். தங்கள் சொந்தப் பணத்தைப் பெறவே மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்றார்கள். பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தபடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவில்லை. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவும் மத்திய அரசு தவறிவிட்டது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் வளர்ச்சிக்கு எதிரான, பொய்யான வாக்குறுதிகளை அளிக்கும் மதவாத பாஜகவையும் அக்கட்சியுடன் சேர்ந்து செயல்படும் சந்தர்ப்பவாத மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியையும் தோற்கடிக்க வேண்டும் என்பதே நமது குறிக்கோள்.
இவ்வாறு சித்தராமையா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT