Last Updated : 09 Apr, 2018 07:39 PM

 

Published : 09 Apr 2018 07:39 PM
Last Updated : 09 Apr 2018 07:39 PM

தலித்களுக்கு எதிரானவர் மோடி; பாஜகவின் அடக்கு முறையை எதிர்ப்போம்: ராகுல் காந்தி ஆவேசப் பேச்சு

 பிரதமர் மோடி தலித்களுக்கும், சிறுபான்மையினர்களுக்கும் எதிரானவர், சாதி வெறிப்படித்தவர் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது கட்ட அமர்வில் 23 நாட்களும் அமளியால் முடங்கியது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக எம்.பி.களும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலங்குதேசம் எம்.பி.க்களும், தெலங்கானாவில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்க கோரி தெலங்குதேசம் எம்.பி.க்களும் போராட்டம் நடத்தி அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக நாடாளுமன்றம் செயல்படவில்லை.

நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல், எதிர்க்கட்சிகள் முடக்கியதைக் கண்டித்தும், காங்கிரஸ் கட்சியின் பொய்பிரச்சாரங்களை எதிர்த்தும் வரும் 12-ம் தேதி பாஜக எம்.பி.க்கள் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே மத்தியில் ஆளும் பாஜகவின் ஆட்சியில் நாட்டில் வகுப்புவாதங்களும், ஜாதி மோதல்களும் அதிகரித்து வருதைக் கண்டித்தும், நாடாளுமன்றத்தை நடத்த முன்வராததற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 9-ம் தேதி (இன்று)மாநில, மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி டெல்லியில் உள்ள ராஜ்காட் பகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உண்ணாவிரதம் இருந்தார். அவருடன் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், பி.சி.சாக்கோ, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டெல்லி மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் அஜெய் மக்கான், மாநில காங்கிரஸ் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உடன் இருந்தனர்.

இதற்கிடையே உண்ணாவிரத மேடையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சாஜன் குமார், ஜெகதீஸ் டைட்லர் ஆகியோர் இருந்தனர். ஆனால், கடந்த 1984-ம் ஆண்டு சீக்கிய கலவரத்தில் இருவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டு இருப்பதால், ராகுல் காந்தி மேடைக்கு வந்ததும் இருதலைவர்களும் மேடையில் இருந்து கீழே இறக்கப்பட்டனர்.இதனால், சாஜன் குமார் கோபமாக உண்ணாவிர இடத்தில் இருந்து வெளியேறிச் சென்றார்.

இந்நிலையில் ராஜ்காட் பகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மத்தியில் ஆளும் பாஜகவின் அடக்குமுறை கொள்கைகளை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்க்கும். பாஜகவின் வகுப்புவாத சிந்தனைகளுக்கு எதிராகவும், நாடாளுமன்றத்தை நடத்தாமல் இருப்பதை கண்டித்தும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை காங்கிரஸ் கட்சி நடத்துகிறது.

பிரதமர் மோடி தலித்களுக்கும், சிறுபான்மையினர்களுக்கும், பழங்குடியினர்களுக்கும் எதிரானவர். இதில் மாற்றுக்கருத்து இல்லை. இது நாடுமுழுவதும் தெரிந்த விஷயம், ரகசியம் ஏதுமில்லை. பிரதமர் மோடி ஒரு சாதிவெறியர். தலித்களையும், சிறுபான்மையினர்களும் அடக்கிவைக்கும் சிந்தனை கொண்டது பாஜக. வரும் 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பாஜகவை நிச்சயம் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கும்.

இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

அதன்பின் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவின் சிந்தாந்தங்களுக்காகவும், மதிப்புகளுக்காகவும் நடத்தப்படும் போராட்டமாகும். வெறுப்புணர்ச்சியுடனும், பிரித்தாளும் சூழ்ச்சியுடனும், வாக்குவங்கிக்காக நடத்தப்படும் அரசியலை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.

ஆங்கிலேயர்கள் பின்பற்றிய பிரித்தாளும் சூழ்ச்சி, வெறுப்பு அரசியலைத் தான் பாஜகவும் பின்பற்றுகிறது. சமூகம், சாதி மக்கள் ஆகியவற்றுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தி பாஜக அரசியல் செய்கிறது. இதுதான் மோடி அரசின் டிஎன்ஏ.

அதுமட்டுமல்லாமல், சமூகத்தில் தலித்களுக்கும், தலித்கள் அல்லாதோருக்கும் இடையே வேறுபாட்டை பாஜக அரசு உருவாக்க முயற்சித்து வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x