Published : 09 Apr 2018 10:26 AM
Last Updated : 09 Apr 2018 10:26 AM
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று ( ஏப்ரல் - 9ம் தேதி) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
காவிரி நீர் பங்கீட்டு வழக்கில் நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா ஆகிய மாநிலங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி தீர்ப்பு அளித்தது. அதில், “காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பை நிறைவேற்ற ‘செயல்திட்டம்’ (ஸ்கீம்) ஒன்றை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும்” என உத்தர விட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் அளித்த கெடு முடிந்து பின்னரும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை.
உச்ச நீதிமன்றம் விதித்த கெடு முடியும் கடைசி நாளில் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள, ‘செயல் திட்டம்’ (ஸ்கீம்) என்பதற்கு விளக்கம் என்ன என சட்ட அமைச்சகத்திடம் மத்திய அரசின் நீர்வளத் துறை விளக்கம் கோரியது. மேலும் மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் விளக்க மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து, குறிப்பாக செயல் திட்டம் (ஸ்கீம்) என்ற வார்த்தைக்கு கர்நாடகாவும், தமிழகமும் இரு வேறுபட்ட விளக்கங்களை அளிக்கின்றன.
எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள ‘செயல் திட்டம்’ (ஸ்கீம்) என்ற சொல்லுக்கு தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும், இதற்காக கூடுதலாக 3 மாதங்கள் கால அவகாசம் தேவைப்படுகிறது’’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு உரியமுறையில் அமல்படுத்தவில்லை எனக்கூறி தமிழக அரசின் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஏப்ரல்- 9ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும், தமிழகத்தின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. அதுபோலவே, ‘ஸ்கீம்’ குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்டு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசரணைக்கு எடுத்துக் கொள்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT