Published : 09 Apr 2018 08:28 AM
Last Updated : 09 Apr 2018 08:28 AM
‘‘ராமர் சேது பாலம் இயற்கையாக உருவானதா அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்டதா என்பது குறித்து ஆராய்ச்சி நடத்தும் திட்டம் எதுவும் இல்லை’’ என்று இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சிலின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அரவிந்த் ஜம்கேத்கர் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளார்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ், இந்திய வரலாற்று ஆய்வு கவுன்சில் (ஐசிஎச்ஆர்) செயல்படுகிறது. இக்கவுன்சிலின் தலைவர் ஒய்.சுதர்சன் ராவ் ஓய்வு பெற்றதையடுத்து புதிய தலைவராக அரவிந்த் ஜம்கேத்கர் கடந்த 5-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
ராமர் சேது பாலம் இயற்கையாக உருவானதா அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்டதா என்பது குறித்து முதற்கட்ட ஆராய்ச்சி நடத்தப்படும். அதன்பிறகு ராமர் சேது பாலம் கடல் பகுதியில் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்படும் என்று கடந்த மார்ச் மாதம் சுதர்சன் ராவ், அறிவித்திருந்தார்.
இந்நிலையில் புதிய தலைவர் அரவிந்த் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ராமர் சேது பாலம் இயற்கையாக உருவானதா அல்லது மனிதர்களால் உருவாக்கப்பட்டதா என்பது குறித்து ஐசிஎச்ஆர் ஆராய்ச்சி நடத்தும் திட்டம் எதுவும் இல்லை. மேலும், இதுகுறித்து ஆராய்ச்சி நடத்த வேறு ஆராய்ச்சி நிறுவனத்துக்கு நிதி ஒதுக்கும் திட்டமும் இல்லை. ராமர் சேது பாலம் குறித்து ஆராய்ச்சி நடத்த வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர் ஒருவர் பரிந்துரை செய்துள்ளார். அதற்கு கவுன்சில் உறுப்பினர்கள் அப்போதே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உண்மையில் உறுப்பினர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்.
இவ்வாறு அரவிந்த் ஜம்கேத்கர் கூறினார். - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT