Published : 09 Apr 2018 08:24 AM
Last Updated : 09 Apr 2018 08:24 AM
எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்ட விவகாரம் தொடர்பாக சமீபத்தில் நடந்த போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற உத்தரபிரதேச கிராம தலித் இளைஞர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், அரசு அதிகாரியை விசாரணையின்றி உடனடியாக கைது செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி மனு தாக்கல் செய்யுமாறு பல்வேறு தரப்பினர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
ஆனால், மனு தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டதால், மத்திய அரசைக் கண்டித்து கடந்த 2-ம் தேதி வட மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். வன்முறையில் ஈடுபட்டதாக சில தலித் இளைஞர்களின் பெயரை உயர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் பட்டியலிட்டுள்ளனர். இதில் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை அடுத்த ஷோபாபூர் கிராமத்தைச் சேர்ந்த கோபி பர்யா (28) முதலிடத்தில் இருந்தார்.
இந்நிலையில் கோபி மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தப் பட்டியலை தயாரித்தவர்கள் யார் என தெரியவில்லை. எனினும், கோபியின் செல்வாக்கு வளர்வதை விரும்பாத சிலர் கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.
இதனிடையே, இந்தப் பட்டியல் போலீஸாரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தங்கள் மீதும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் காரணமாக இந்தப் பட்டியலில் உள்ள இளைஞர்கள் தங்கள் சொந்த ஊரை விட்டு தலைமறைவாகி உள்ளனர்.
அதேநேரம், ஊரைவிட்டு வெளியேறாத ஒரு இளைஞர் கூறும்போது, “எதிர்ப்பு போராட்ட உணர்வு எங்களைவிட்டு போகவில்லை. வரும் 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாட உள்ளோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT