Published : 06 Apr 2018 06:35 PM
Last Updated : 06 Apr 2018 06:35 PM
பாஜகவுக்கு போட்டியாக காங்கிரஸ் கட்சியும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளது.
வரும் 9-ம் தேதி நாட்டில் உள்ள அனைத்து மாநில, மாவட்ட தலைநகரங்களிலும் பாஜகவின் பொய்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத விஷயங்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இந்த உண்ணாவிரதம் நடத்தப்படுகிறது.
நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் காங்கிரஸ் கட்சி கடந்த 22 நாட்களாக முடக்கியதற்கும், அந்தக் கட்சியின் எம்.பி.க்களின் நடத்தையைக் கண்டித்தும் பாஜக வரும் 12-ம் தேதி உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளது. அதற்குப் போட்டியாக காங்கிரஸ் உண்ணாவிரதம் இருக்கிறது.
இது தொடர்பாக மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மற்றும் செய்தித்தொடர்பாளர் ஆனந்த் சர்மா டெல்லியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
''நாடாளுமன்றம் செயல்படாமல் போனதற்கு முக்கியக் காரணம் ஆளும் பாஜகதான். அந்தக் கட்சி செய்த தந்திர வேலையும், நாடகமும்தான் நாடாளுமன்ற முடக்கத்துக்கு காரணமாகும். 23 நாட்கள் ஊதியத்தை வேண்டாம் என்று அந்தக் கட்சியின் எம்.பி.க்கள் கூறி இருப்பது நாடகமாகும்.
காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் மாநிலங்களவை தலைவரைச் சந்தித்து அவையை ஒத்திவைக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளோம். இன்னும் 2 வாரங்கள் நடத்த வேண்டும், பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம்.
மேலும், நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள், மாவட்ட தலைநகரங்களிலும் அமைதி, சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்தி வரும் 9-ம் தேதி காங்கிரஸ் தொண்டர்கள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார்.
பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும், சமூக்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரிவினைவாத அரசியலை தூண்டிவிடுகின்றன. இதை காங்கிரஸ் கட்சி உண்ணாவிரதத்தன்று மக்களிடம் வெளிப்படுத்துவோம். சமூகத்தில் மக்களிடம் அமைதியும், ஒற்றுமையும் நிலவ ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.''
இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கேவும், ஆனந்த் சர்மாவும் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT