Published : 06 Apr 2018 08:26 AM
Last Updated : 06 Apr 2018 08:26 AM

உத்தரபிரதேசத்தில் முதல் முறையாக அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாடுகிறது சமாஜ்வாதி

உத்தர பிரதேசத்தில் முதல்முறையாக அம்பேத்கர் பிறந்தநாள் விழாவைக் கொண்டாட சமாஜ்வாதி கட்சி முடிவு செய்துள்ளது.

அம்பேத்கரின் 127-வது பிறந்த நாள், வரும் 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி வழக்கமாக அம்பேத்கரின் பிறந்த நாளை கொண்டாடுவது இல்லை. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி சார்பாகவே அம்பேத்கர் பிறந்த நாள் விமரிசையாகக் கொண்டாடப்படும். ஆனால், உ.பி.யில் சமீபத்தில் இரண்டு மக்களவைத் தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தல்களில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடாமல் சமாஜ்வாதி கட்சிக்கு மறைமுக ஆதரவு அளித்தது.

அந்த இரண்டு தொகுதிகளிலும் பாஜகவை தோற்கடித்து சமாஜ்வாதி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து சமாஜ்வாதி கட்சிக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் நட்புறவு அதிகரித்தது. வரும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கும் வியூகமாக இரண்டு கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று மதச்சார்பற்ற கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில், வரும் 14-ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளை பிரம்மாண்டமாக கொண்டாட சமாஜ்வாதி கட்சி முடிவு செய்துள்ளது. மாநிலம் முழுவதும் அம்பேத்கர் பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமாஜ்வாதி கட்சியின் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடப்படுவது இதுவே முதல்முறையாகும். இது சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் இடையே நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x