Published : 20 Mar 2018 08:47 AM
Last Updated : 20 Mar 2018 08:47 AM

அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கமே இந்திய தத்துவங்களின் ஆணிவேர்: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவையே இந்திய தத்துவங்களின் ஆணிவேராக உள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த சூபி அறிஞரான க்வாஜா மொய்னுதீன் சிஷ்டி என்பவரின் தர்கா ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ளது. சிஷ்டியின் 806-வது உரூஸ் விழா அஜ்மீரில் நடந்து வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர். உரூஸ் விழாவின்போது மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் முஸ்லிம்கள் மட்டுமின்றி இந்துக்களும் மலர் போர்வைகளையும் சால்வைகளையும் நினைவிடத்தில் அணிவிப்பது வழக்கம். க்வாஜா மொய்னுதீன் சிஷ்டி நினைவிடத்தில் சமர்ப்பிக்க பிரதமர் மோடி சால்வையை காணிக்கையாக அளித்துள்ளார். மோடி வழங்கிய சால்வையை அவரது சார்பில் தர்கா நிர்வாகத்தினரிடம் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி வழங்கினார்.

உரூஸ் விழாவையொட்டி வாழ்த்துச் செய்தியையும் பிரதமர் மோடி அனுப்பியுள்ளார். அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், ‘‘அமைதி, ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவையே இந்தியாவின் பல்வேறு தத்துவங்களின் ஆணிவேராக உள்ளன. சூபியிசமும் இந்த தத்துவத்தில் ஒன்றாகும். இந்தியாவில் உள்ள சூபி அறிஞர்களில் க்வாஜா மொய்னுதீன் சிஷ்டி ஆன்மீக பாரம்பரியத்தின் மிகச் சிறந்த சின்னமாக திகழ்கிறார். கரிப் நவாஸ் என்று அழைக்கப்படும் அவர் மனித குலத்துக்கு ஆற்றிய தொண்டு எதிர்கால தலைமுறையினருக்கு ஊக்க சக்தியாக தொடர்ந்து விளங்கும்’’என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x