Published : 20 Mar 2018 08:41 AM
Last Updated : 20 Mar 2018 08:41 AM
பஞ்சாப் தேர்தலின்போது, போதைப் பொருள் வர்த்தகத்தில் தொடர்பு இருப்பதாக அப்போதைய அமைச்சர் விக்ரம் சிங் மஜீதியா மீது ஆம் ஆத்மி தலைவரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டினார். இப்புகாரை சில நாட்களுக்கு முன் திரும்பப் பெற்ற கேஜ்ரிவால் இதற்காக மஜீதியாவிடம் மன்னிப்பு கோரினார். இது மாநில ஆம் ஆத்மி தலைவர்களை அதிருப்தி அடையச் செய்தது.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை, மோசமான ஊழல் அரசியல்வாதிகளில் ஒருவர் என கேஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் கட்கரிக்கு கேஜ்ரிவால் நேற்று எழுதிய கடிதத்தில், “உங்களைப் பற்றி சில கருத்துகளை அதன் உண்மைத்தன்மை குறித்து ஆராயாமல் கூறிவிட்டேன். எனது கருத்துக்காக வருந்துகிறேன். நாம் இந்தப் பிரச்சினையை ஒதுக்கிவைத்து நீதிமன்ற வழக்கை முடிவுக்கு கொண்டு வருவோம்” என்று கூறியிருந்தார். இதையடுத்து அவதூறு வழக்கை திரும்பப் பெறுவதற்கான கூட்டு விண்ணப்பம் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் கேஜ்ரிவால், கட்கரி தரப்பில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.
இதுபோல் கேஜ்ரிவாலுக்கு எதிரான அவதூறு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், அவரது மகன் அமித் சிபலிடம் மன்னிப்பு கோரி, கேஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் நேற்று கடிதம் எழுதியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT