Published : 03 Mar 2018 08:53 AM
Last Updated : 03 Mar 2018 08:53 AM

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழலுக்கு ப.சிதம்பரமே மூலக் காரணம்: பாஜக குற்றச்சாட்டு

ஐஎன்எக்ஸ் மீடியா ஊழலுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரமே மூலக் காரணம் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜிவிஎல். நரசிம்ம ராவ் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் சட்டவிரோதமாக அன்னிய முதலீடுகள் பெற்றதில் நடந்த ஊழல் குறித்து அதன் முன்னாள் நிறுவனர் இந்திராணி முகர்ஜி சிபிஐ-யிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்படி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரமே ஊழலுக்கு மூலக் காரணமாக இருந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது மிகப்பெரிய பொருளாதார குற்றமாகும். ஆனால், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு. இந்த ஊழல் குறித்து காங்கிரஸ் கட்சி பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு ஜிவிஎல்.நரசிம்மராவ் தெரிவித்தார்.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளைப் பெற அந்நிய முதலீட்டு வாரியம் சட்டவிரோதமாக அனுமதி வழங்கியதாகவும் இதன் பின்னணியில் கார்த்தி சிதம்பரம் செயல்பட்டதாகவும் சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கடந்த 28-ம் தேதி சிபிஐ கைது செய்தது. தற்போது சிபிஐ காவலில் உள்ள அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x