Published : 03 Mar 2018 08:52 AM
Last Updated : 03 Mar 2018 08:52 AM
‘‘வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற அரசு பெண் ஊழியருக்கு 180 நாட்கள் பேறுகால விடுப்பு வழங்க வேண்டும்’’ என்று மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
மத்திய சட்டம் மற்றும் நீதித் துறையில் தனி உதவியாளராகப் பணியாற்றும் பெண் ஒருவர், மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளால் என்னால் கருவுற இயலாத நிலையில் இருக்கிறேன். எனவே, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டேன். அதன்படி கடந்த ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி வாடகை தாய் 2 பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். குழந்தை பெற்ற நாளில் இருந்து எனக்கு 180 நாட்கள் பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று கோரி விண்ணப்பித்தேன்.
ஆனால், மத்திய சிவில் சர்வீசஸ் விடுப்பு சட்ட விதிகளின்படி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பெண்ணுக்குக் கிடையாது என்று கூறி எனது விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டனர். அந்த உத்தரவை ரத்து செய்து, எனக்கு பேறுகால விடுப்பு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் அந்தப் பெண் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம், உயர் நீதிமன்றங்களின் 3 தீர்ப்புகளைச் சுட்டிக் காட்டி, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற பெண்ணுக்கு 180 நாட்கள் பேறுகால விடுப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. தீர்ப்பாயம் கூறும்போது, ‘‘பேறுகாலம் என்பது தாய்மை அடைவது.
அவர் இயற்கை தாயா அல்லது வாடகை தாயா என்று வேறுபடுத்தி பார்ப்பது சரியாக இருக்காது. மேலும், மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, ‘‘வாடகை தாயும், அவர் மூலம் குழந்தை பெறும் தாயும் குழந்தையுடன் சில காலம் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் நிலையில் உள்ளனர். எனவே, இருவருக்குமே பேறுகால விடுப்பு வழங்கப்பட வேண்டும்’’ என்று கடந்த 2016-ம் ஆண்டு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி பேறுகால விடுப்பு வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT