Published : 15 Feb 2018 10:40 AM
Last Updated : 15 Feb 2018 10:40 AM
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு கேரளா கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் செயல்படும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடுவதாகவும், அந்த அமைப்பு தொடர்புடையவர்கள் மீது கேரளாவில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து அந்த அமைப்பிற்கு தடை விதிக்கக்கோரி கேரள மாநில அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இதுகுறித்து உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:
"பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு தடை விதிக்குமாறு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்த உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்துள்ளது. அவர்கள் செயல்பாடுகள் தொடர்பான ஆதாரங்களை திரட்டி வருகிறோம். இதுகுறித்து மத்திய பிரதேச மாநிலம் தெகன்பூரில் நடைபெறும் மாநில டிஜிபிக்கள் மாநாட்டில் விவாதிக்கப்படும். அதன் பின் தடை விதிப்பது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும்"எனக்கூறினார்.
இதுபற்றி உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில் "சிமி எனப்படும் இந்திய இஸ்லாமிக் மாணவர் இயக்கம் மற்றும் இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் மீதும் இதுபோன்ற புகார்கள் வந்தன. மாநில காவல்துறை டிஜிபிக்கள் கூட்டத்திற்கு பிறகே இதுபற்றி முடிவெடுக்கப்பட்டது. தற்பேதும் அதே நடைமுறையையே பின்பற்ற உள்ளோம். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு குறித்து தேசிய புலனாய்வு அமைப்பும் விசாரணை நடத்தி தகவல்களை திரட்டியுள்ளது" எனக்கூறினார்.
கடந்த 2010ம் ஆண்டு கேரள மாநிலம் மூவாத்துபுழாவில் பேராசிரியர் டி.ஜே ஜோசப் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்ட வழக்கில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மீது புகார் கூறப்படுகிறது.
இந்த வழக்கில் அந்த அமைப்பைச் சேர்ந்த 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோலவே வேறு சில வழக்குகளும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT