Published : 13 Feb 2018 10:10 AM
Last Updated : 13 Feb 2018 10:10 AM
ராணுவத்தை அவமதிக்கும் வகையில் மோகன் பாகவத் பேசவில்லை என்றும் அவரது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் ஆர்எஸ்எஸ் விளக்கம் அளித்துள்ளது.
பிஹார் மாநிலம் முசாபர்பூரில் நேற்று முன்தினம் நடந்த ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் அந்த இயக்கத்தின் தலைவர் மோகன் பாகவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘‘ஆஎஸ்எஸ் இயக்கம் மூன்றே நாட்களில் ராணுவ வீரர்களை உருவாக்கும் திறன் கொண்டது’’ என்று பேசியதாக செய்திகள் வெளியானது.
இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பலர் கண்டனம் தெரிவித்தனர். ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில், ‘‘மோகன் பாகவத்தின் பேச்சு ஒவ்வொரு இந்தியனுக்கும் அவமானம். நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களை மோகன் பாகவத் அவமதித்து விட்டார்’’ என்று தெரிவித்தார்.
இந்நிலையில், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பிரசார செயலாளர் மன்மோகன் வைத்யா நேற்று வெளியிட்ட அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், ‘‘மோகன் பாகவத்தின் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. ராணுவத்தை அவமதிக்கும் வகையி்ல் அவர் பேசவில்லை. ‘போர் போன்ற சூழ்நிலை ஏற்பட்டு அரசியல் சாசனமும் அனுமதித்தால் சமூகத்தை தயார்படுத்த ராணுவத்துக்கு 6 மாதம் ஆகும். ஆர்எஸ்எஸ் அதை 3 நாட்களில் செய்துவிடும்’ என்றுதான் மோகன் பாகவத் பேசினார். ராணுவத்தை அவர் அவமதிக்கவில்லை. ஆர்எஸ்எஸ் தொண்டர்களின் திறமை, கட்டுப்பாடு, ஒழுக்க நெறியை குறி்ப்பிடுவதற்காக அவ்வாறு பேசினார்’’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT