Published : 13 Feb 2018 09:57 AM
Last Updated : 13 Feb 2018 09:57 AM
கலவரக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ராணுவ அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்தது ஏன் என்பதற்கு விளக்கம் அளிக்குமாறு காஷ்மீர் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டம் கனோவ்போரா கிராமத்தில் கடந்த ஜனவரி மாதம் 27-ம் தேதி ராணுவத்தினர் மீது கலவரக்காரர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். ராணுவ அதிகாரி ஒருவரைக் கொல்லவும் முயற்சித்தனர். நிலைமையைக் கட்டுப்படுத்த ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் இறந்தனர். இதைத் தொடர்ந்து ராணுவ மேஜர் ஆதித்ய குமார் உட்பட சில வீரர்கள் மீது காஷ்மீர் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்தனர்.
இதை எதிர்த்து மேஜர் ஆதித்ய குமாரின் தந்தையும் ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றி வருபவருமான கரம் வீர் சிங், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ‘‘ராணுவத்தினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தது ஏன் என்று 2 வாரங்களுக்குள் காஷ்மீர் அரசு பதிலளிக்க வேண்டும். அதுவரை மேஜர் ஆதித்ய குமார் உட்பட ராணுவ அதிகாரிகள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கக் கூடாது’’ என்று உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT