Last Updated : 11 Feb, 2018 08:51 AM

 

Published : 11 Feb 2018 08:51 AM
Last Updated : 11 Feb 2018 08:51 AM

60 நாடுகளின் 200 படம் திரையிடல்: 22-ல் சர்வதேச திரைப்பட விழா பெங்களூருவில் தொடக்கம்- இரு தமிழ் திரைப்படங்கள் தேர்வு

கர்நாடக மாநில செய்தித் துறை செயலர் பங்கஜ் குமார் பாண்டே செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

பெங்களூருவில் உள்ள ஓரியன் மாலில் 10-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா வரும் 22-ம் தேதி முதல் மார்ச் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக சர்வதேச அளவில் 800 திரைப்படங்கள் பரிசீலிக்கப்பட்டு, இறுதியாக 60 நாடுகளைச் சேர்ந்த 200 திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த திரைப்படங்கள் விழாவின்போது திரையிடப்படும்.

சர்வதேச, ஆசிய, இந்திய, கன்னட ஆகிய 4 பிரிவுகளில் நடைபெறும் போட்டியில் வெற்றிபெறும் படங்களுக்கு மார்ச் 1-ம் தேதி முதல்வர் சித்தராமையா விருது வழங்குவார். தாய்லாந்து, ஜெர்மனி, லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் அதிகளவில் திரையிடப்படுகின்றன. தமிழில் ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய டூ-லெட் திரைப்படமும் பிரச்சன்னா ராமசாமி இயக்கிய எழுத்தாளர் அசோக மித்ரன் என்கிற ஆவண திரைப்படமும் திரையிடப்பட உள்ளன.

கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் குறித்த ஆவணப்படம், கருத்துரிமை தொடர்பான 2 ஆவணப்படங்கள் திரையிடப்பட உள்ளன. விழாவில் திரைத்துறை ஆளுமைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என எதிர்ப்பாக்கப்படுகிறது.

இவ்வாறு பங்கஜ் குமார் பாண்டே தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x