Published : 05 Feb 2018 09:50 PM
Last Updated : 05 Feb 2018 09:50 PM

‘என்னை சப்தம் போட்டு அடக்காதீர்கள், நீதிபதி பேசும் போது கவனியுங்கள்’ : உச்ச நீதிமன்றத்தில் பரபரப்பு!

சிபிஐ நீதிபதி பி.எச்.லோயா திடீர் மரணம் குறித்த தனித்த விசாரணை கோரும் நிறைய பொதுநலமனுக்களுக்கான வழக்கின் போது உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திராசூட், மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவேவுக்கு எதிராக கடும் கோபமடைந்தது பரபரப்பானது.

விசாரணை கோரும் பாம்பே வழக்கறிஞர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த துஷ்யந்த் தவே, ’உண்மையின் குரல்’ முடக்கப்படுகிறது என்றார்.

வாதவிவாதங்களின் ஒரு கட்டம் வழக்கறிஞர்களிடையே மோசமான வாதமாக மாற, நீதிபதி சந்திராசூட் தலையிட, மூத்த வழக்கறிஞர் தவே ஆக்ரோஷமாக வாதாட, நீதிபதி சந்திரா சூட், தவேயை நோக்கி, “நீங்கள் சப்தம் போட்டு என்னை அடக்க முடியாது. நீதிபதிகள் பேசும் போது நீங்கள் கவனிக்க வேண்டும்” என்று சற்று உரக்கச் சாடினார்.

‘நான் உங்கள் பேச்சை கேட்கப்போவதில்லை’ என்று நீதிபதி சந்திராசூட்டிற்கு பதிலளித்தார் வழக்கறிஞர் தவே. இதற்கு உடனே நீதிபதி சந்திராசூட், “அப்படியென்றால் நாங்களும் நீங்கள் கூறுவதைக் கேட்க மாட்டோம்” என்று பதிலளித்தார்.

லோயா மரணத்திற்கு தனிவிசாரணை கோரும் மனுக்கள் மீது நீதிபதிகள் மனசாட்சிபடி நடக்க வேண்டும் என்று தவே வலியுறுத்தினார். ‘இந்த வழக்கில் நீதி கிடைக்காது என்ற அச்சம் நிலவுகிறது” என்றார்.

இதற்கு பதில் அளித்த நீதிபதி சந்திராசூட், “இந்த வழக்கின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆராய்வோம். எங்களுக்கு மனசாட்சியை நீங்கள் தயவுகூர்ந்து நினைவுபடுத்த வேண்டிய அவசியமில்லை” என்றார்.

இது நடந்து கொண்டிருக்கும் போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் அமைதியாக பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.

இது மிக மோசமாக எப்போது திரும்பியது என்றால் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களிடையே ஒருவருக்கொருவர் குற்றம்சுமத்தத் தொடங்கியபோது. ஒரு நேரத்தில் நீதிபதி சந்திராசூட் வழக்கறிஞர்கள் இடையே நடைபெற்ற காரசார ஏச்சுப் பேச்சுகளை ‘மீன் சந்தை’ என்று வர்ணிக்க நேரிட்டது.

மூத்த வழக்கறிஞர் பல்லவ் சிசோடியா, இவர் பொதுநல மனுதாரரும் மும்பை பத்திரிகையாளருமான பி.எச்.லோனி என்பவருக்காக வாதாடியட் போது லோயா வழக்கில் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் வதந்திகளை ஆதாரமாகக் கொண்டவை என்றார். இந்த லோயா பொதுநல மனுக்களால் ஏகப்பட்ட குழப்பங்கள் விளைந்து நீதித்துறை மாண்பு மீது கேள்விகள் ஏற்பட்டு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அளித்த செய்தியாளர்கள் சந்திப்பு வரை சென்றது என்று சுட்டிக்காட்டினார்.

உடனே மூத்த வழக்கறிஞர் தவே, பல்லவ் சிசோடியா வழக்கைச் சதி செய்கிறார் என்று குற்றம்சாட்டினார். உடனே பல்லவ் சிசோடியா, “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது பற்றி எங்களுக்கு கவலையில்லை. நீங்கள் சொர்க்கம், நரகம் என்று எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள்” என்றார் காட்டமாக.

அப்போது முன்னாள் தலைமை நீதிபதிகளான, அதாவது முதல் தலைமை நீதிபதி ஹரிலால் ஜே.கனியா, 4-வது நீதிபதி பி.கே.முகர்ஜி ஆகியோரது புகைப்படங்களைச் சுட்டிக்காட்டி ”இவர்கள் நம்மைப் பார்க்கும் போது இது வேண்டாம்” என்று எச்சரித்தார் நீதிபதி சந்திராசூட். பிறகு பல்லவ் சிசோடியாவின் மோசமான பேச்சைக் கண்டிக்க அவர் மன்னிப்பு கேட்டார்.

“இதே கோர்ட்டில் நாங்களும் ஜூனியர்களாக வாதாடியுள்ளோம், ஆனால் ஒரு போதும் வாதாடுதல் இவ்வளவு மோசமாகத் தாழ்ந்ததில்லை இது அடக்குமுறையானது” என்றார் சந்திராசூட்.

இந்நிலையில் மூத்த வழக்கறிஞர் துஷ்வந்த் தவே, “மாண்பு மிகு நீதிபதியவர்களுக்கு அடக்குமுறை என்றால் என்னவென்பதை விளக்குகிறேன். மகாராஷ்டிர அரசு சார்பாக அமித் ஷா சார்பாக ஹரிஷ் சால்வே ஆஜரானதுதான் அடக்குமுறை அவர் ஏன் அமித் ஷாவை பாதுகாக்க வேண்டும்?” என்றார்.

இதற்கு பல்லவ் சிசோடியா, “அமித் ஷாவுக்கு தன்னைப் பாதுகாத்துக் கொள்ளத் தெரியும்.” என்றார்.

முன்னதாக மூத்த வழக்கறிஞர் வி.கிரி, லோயா மரணம் குறித்து விசாரித்த மாநில உளவுத்துறையின் விசாரணை வெறுமனே நாற்காலி விசாரணைதான் ஆகவே உச்ச நீதிமன்றம் புதிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.

பிப்ரவரி 9-ம் தேதி வாதங்கள் தொடர்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x