Last Updated : 05 Feb, 2018 04:02 PM

 

Published : 05 Feb 2018 04:02 PM
Last Updated : 05 Feb 2018 04:02 PM

பிரதமர் பதவியில் தொடர மோடிக்கு தார்மீக உரிமை இல்லை:கர்நாடக முதல்வர் சித்தராமையா கடும் தாக்கு

பிரதமர் பதவியில் தொடர்ந்து நீடிப்பதற்கு மோடிக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கடுமையாக சாடினார்.

பெங்களூரில் பாஜக சார்பில் பரிவர்த்தன் பேரணி நேற்று நடந்தது. இதில் பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் காங்கிரஸ் கலாச்சாரம் ஒழிக்கப்படும் என்று பேசியதோடு, பாஜக ஆட்சிக்கு வந்தால், கர்நாடகத்தில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் அறிவித்தார்.

இதற்கு பதில் அளித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பாஜக தலைவர் அமித் ஷா ஒரு கொலை வழக்கில் தொடர்புடையவர். அவர் எப்போதும் பொய்யைத் தவிர வேறு ஒன்றும் பேசுவதில்லை. மாநிலத்தின் பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக இருக்கும் எடியூரப்பா சிறைக்கு சென்றவர். இவ்வாறான நபர்கள்தான் பாஜகவில் இருக்கிறார்கள்.

பிரதமர் மோடி மாநிலம் குறித்து பல்வேறு பொய்களைக் கூறி கன்னட மக்களின் பெருமைக்கு இழுக்கு சேர்த்துவிட்டார்.

கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்காக மிகப்பெரிய தொகையை மத்திய அரசு தருகிறது என்று கூறுகிறார். ஆனால், உண்மையில், பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே மத்திய அரசு அதிகமான நிதி உதவிகளை அளிக்கிறது.

கர்நாடக மாநிலத்துக்கு அதிகமான நிதி உதவி அளித்துள்ளதாக பிரதமர் மோடி கூறுகிறார். இந்த பணம் எல்லாம் எங்கு இருந்து வந்தது என்று நினைக்கிறீர்கள்?. மாநிலத்தில் இருந்து வரியாக வசூல் செய்யப்பட்ட பணத்தைதான் நீங்கள் எங்களுக்கு திருப்பிக் கொடுக்கிறீர்கள். எங்களின் பணம்தான் திரும்பக் கிடைக்கிறது.

கடந்த 14-வது நிதி குழுவின்படி, கடந்த 3 ஆண்டுகளாக கர்நாடக மாநிலம் ரூ.92,200 கோடி பெற்று வருகிறது. இதற்கு முந் ரூ.84,500க கோடி பெற்றோம். கூடுதலாக ரூ.10 ஆயிரம் கோடிமட்டுமே பெற்று வருகிறோம். இது பிரதமர் மோடிக்கும், அமித் ஷாவுக்கு தெரியும்.

பிரதமர் மோடி ஊழல் குறித்து எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார். பிரதமர் பதவியில் தொடர் மோடிக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை.

குஜராத்தில் முதல்வராக இருந்ததில் இருந்து 9 ஆண்டுகளாக லோக்ஆயுக்தாவை அமைக்காத மோடி இப்போது லோக்பால் குறித்து பேச என்ன தார்மீக உரிமை இருக்கிறது.

அவர் ஊழலை வளர்த்து இருக்கிறார். நாட்டின் பிரதமராக மோடி தொடர்வதற்கு எந்தவிதத்திலும் உரிமை இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x