Last Updated : 05 Feb, 2018 10:55 AM

 

Published : 05 Feb 2018 10:55 AM
Last Updated : 05 Feb 2018 10:55 AM

பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு: பட்டமளிப்பு ஆடையுடன் பக்கோடா விற்ற இளைஞர்கள் கைது

 

பெங்களூருவில் நேற்று பிரதமர் மோடி வருகையின்போது, அவரின் பேரணி நடக்கும் பகுதியில் பட்டமளிப்பு ஆடையுடன், பக்கோடா விற்பனை செய்த இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்.

சமீபத்தில் தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்தார். அப்போது, நாட்டில் வேலையின்மையைப் பற்றி பேசுகிறார்கள். இந்த சேனலுக்கு வெளியே நின்று இளைஞர்கள் பக்கோடா விற்பனை செய்தால் கூட நாள் ஒன்றுக்கு ரூ. 200 சம்பாதிக்கலாம் என்று கூறி இருந்தார்.

பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது, மேலும் காங்கிரஸ் கட்சியும் கண்டனம் தெரிவித்து இருந்தது. இது தொடர்பாக நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பாஜக அலுவலகம் முன் படித்த இளைஞர்கள் பக்கோடா விற்பனை செய்து எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பெங்களூரு நகருக்கு நேற்று பிரதமர் மோடி பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு வந்திருந்தார். அவரின் பேரணி நடக்க இருந்த பேலஸ் சாலை அருகே இளைஞர்கள் பலர் பட்டமளிப்பு ஆடையுடன், பக்கோடா விற்பனை செய்து மோடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மோடியின் வருகைக்கு சில மணிநேரங்கள் முன் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இதை அறிந்து அங்கு சென்ற போலீஸார் இளைஞர்களை கைது செய்தனர்.

அப்போது, இளைஞர்கள் மோடி பக்கோடா, அமித் ஷா பக்கோடா, எடியூரப்பா பக்கோடா என கோஷங்களை எழுப்பினர். இதனால், அப்பகுதியில்  பரபரப்பு நிலவியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x