Published : 05 Feb 2018 08:57 AM
Last Updated : 05 Feb 2018 08:57 AM
பிரிட்டனில் ஓட்டல், வீடுகள், அடுக்கு மாடி கட்டிடங்கள், மேன்சன் என பல சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளார் மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம்.
மும்பையைச் சேர்ந்த தாதா தாவூத் இப்ராஹிம், தற்போது பாகிஸ்தானில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரிட்டனில் அவர் பல சொத்துகளை வாங்கிக் குவித்திருப்பதாக தி டைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பிரிட்டனிலுள்ள கம்பனீஸ் ஹவுஸ் அண்ட் தி லேண்ட் ரெஜிஸ்ட்ரி அமைப்பு, பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள் போன்றவற்றிலிருந்து இந்த சொத்து விவரங்கள் கிடைத்துள்ளதாக தி டைம்ஸ் இதழ் செய்தியை வெளியிட்டுள்ளது.
பிரிட்டனின் லண்டன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அவர் ஓட்டல்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் என பல சொத்துகளை வாங்கியுள்ளார். அதேபோல தாவூத்தின் வலது கரமாக செயல்பட்டு வரும் முகம்மது இக்பால் மிர்ச்சி மேமனுக்கு, பிரிட்டனில் சொத்துகள் உள்ளன. தவிர ஐக்கிய அரபு அமீரகம், ஸ்பெயின், மொராக்கோ, துருக்கி, சைப்ரஸ், ஆஸ்திரேலியாவிலும் அவர் சொத்துகளை வாங்கியுள்ளார்.
தாவூத் மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரியிலுள்ள கேர் கிராமத்தைச் சேர்ந்தவர். 1993-ல் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர். அதன்பிறகு அவர் துபாய்க்குத் தப்பினார். மும்பையில் இருந்தபோது மும்பை துறைமுகம் வழியாக பாகிஸ்தானுக்கும், பல நாடுகளுக்கும் போதைப் பொருட்களைக் கடத்தி பெரும் பொருள் ஈட்டினார் தாவூத்.
தாவூத்தை வைத்து, பிபிசி தொலைக்காட்சியில் மெக்மாபியா என்ற பெயரில் செய்திப்பட தொடர் தயாரிக்கப்பட்டது. அதைப் போலவே டெல்லி மஹ்மூத் என்ற பெயரில் டி.வி. தொடரும் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT