Last Updated : 05 Feb, 2018 08:51 AM

 

Published : 05 Feb 2018 08:51 AM
Last Updated : 05 Feb 2018 08:51 AM

நீதிபதி லோயா மரண வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

சிபிஐ நீதிமன்ற நீதிபதி பி.எச்.லோயா மரணம் குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

சிபிஐ நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் பி.எச்.லோயா. இவர் கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி நாக்பூரில் மாரடைப்பால் உயிரிழந்தார். பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் செராபுதீன் ஷேக், போலி என்கவுன்ட்டர் வழக்கை லோயா விசாரித்து வந்தார். இந்த வழக்கில் மாநிலங்களவை எம்பி-யும், பாஜக தலைவருமான அமித் ஷாவும் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். லோயா மரணத்திற்குப் பின் பொறுப்பேற்ற நீதிபதி இந்த வழக்கில் இருந்து அமித் ஷாவை விடுவித்து உத்தரவிட்டார்.

இந்த பின்னணியில் லோயா மரணம் இயற்கையானது அல்ல என்று கூறி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கலானது. இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, அறிக்கை தாக்கல் செய்யும்படி மகாராஷ்டிர மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, நீதிபதி லோயா மரணம் இயற்கையானது என்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கடந்த 2-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்கி, துஷ்யந்த் தவே உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராயினர். இருதரப்பு வழக்கறிஞர்கள் மத்தியில் காரசார விவாதம் நடந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இன்றும் இந்த வழக்கில் பரபரப்பான வாதங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x