Last Updated : 01 Feb, 2018 08:37 PM

 

Published : 01 Feb 2018 08:37 PM
Last Updated : 01 Feb 2018 08:37 PM

ராஜஸ்தான், மே.வங்க இடைத் தேர்தலில் பாஜக படுதோல்வி:காங்கிரஸ், திரிணாமுல் அபார வெற்றி

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது , அதேபோல மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் வாகை சூடியுள்ளது.

பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் நாடாளுமன்ற, சட்டசபை இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்று பாஜகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர், ஆல்வார் நாடாளுமன்ற தொகுதிகள், மண்டல்கர் சட்டப்பேரவைத் தொகுதிக்கும், மேற்கு வங்க மாநிலத்தின் நபோரா சட்டப்பேரவைத் தொகுதிக்கும், உலுபெரியா மக்களவைத் தொகுதிக்கும் கடந்த 29-ம் தேதி இடைத் தேர்தல் நடந்தது.

இந்த தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் ஆல்வார் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கரண் சிங் யாதவ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஜஸ்வந்த் சிங் யாதவைக் காட்டிலும் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 719 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் மொத்தமாக

6 லட்சத்து 42 ஆயிரம் வாக்குகள் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஜஸ்வந்த் சிங் 4 லட்சத்து 45 ஆயிரத்து 312 வாக்குகள் பெற்றார்.

அதேபோல அஜ்மீர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராம்ஸ்வரூப் லம்பாவைக் காட்டிலும் 84 ஆயிரத்து 414 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ரகுசர்மா. வெற்றி பெற்றார். இவர் ஒட்டுமொத்தமாக 6 லட்சத்து 11ஆயிரத்து 514வாக்குகள் பெற்றார். பாஜக வேட்பாளர் லம்பா 5 லட்சத்து 27 ஆயிரத்து 100 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

இதேபோல மண்டல்கர் சட்டசபைத் தொகுதியிலும் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றி அந்த கட்சியின் தொண்டர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அடுத்து வரும் தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்வார்கள்.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டவிட்டரில் வெளியிட்ட பதிவில், “ ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சிக்கு பாராட்டுக்கள். ஒவ்வொருவரும் சிறப்பாக பணியாற்றி உள்ளீர்கள். மக்கள் பாஜகவை புறக்கணிக்கத் தொடங்கிவிட்டனர் என்பது தெரிந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த உலுபெரியா மக்களவைத் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சஜ்தா அகமது 4 லட்சத்து74 ஆயிரத்து 510 வாக்குகள் பெற்று பெற்றார். பாஜக வேட்பாளர் அனுபம் மாலிக் 2 லட்சத்து 93 ஆயிரம் வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

நபோரா சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சுனில் சிங் 63 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் ஒரு லட்சத்து ஆயிரத்து 179 வாக்குகள் பெற்று வாகை சூடினார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 38 ஆயிரத்து 711 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x