Last Updated : 01 Feb, 2018 01:17 PM

 

Published : 01 Feb 2018 01:17 PM
Last Updated : 01 Feb 2018 01:17 PM

விளையாட்டு பயிற்சி மையங்கள் கூடுதலாக அமைக்க கோரிக்கை: மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரிடம் பாலகிருஷ்ணா ரெட்டி மனு

 

தமிழகத்தில் மத்திய அரசின் தேசிய விளையாட்டு மையங்கள் கூடுதலாக அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த மனுவை டெல்லியில் மத்திய இளைஞர் நலன், விளையாட்டு, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) ராஜ்யவர்தன் சிங் ரத்தோரை சந்தித்து தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி அளித்தார்.

மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் விளையாட்டு மேம்பாட்டிற்கான தேசிய திட்டம் 'கேலோ இந்தியா'வின் ஒரு பகுதியாக 'கேலோ இந்தியா பள்ளி விளையாட்டுப் போட்டிகள்' நடத்தப்படுகிறது. விளையாட்டில் பெரும்பாலோரை கலந்துகொள்ளச் செய்தல் மற்றும் விளையாட்டில் முதன்மை பெறுதல் ஆகியவற்றை ஊக்குவிப்பதன் மூலம் நமது சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதை குறிக்கோளாகக் கொண்டு இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன் மூலம் இளம் திறனாளர்களையும் கண்டறிய முயற்சிக்கப்படுகிறது. இந்தப் போட்டிகள் டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.

இதில் கலந்துகொள்ள வந்த தமிழக இளைஞர் மேம்பாடு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி, மத்திய இணை அமைச்சர் ராஜ்யவர்த்தனை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அப்போது அவர், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு அறிவியல் துறை, ஊட்டியில் மலை மேலிட பயிற்சி முகாம் தொடங்க அனுமதி கேட்டார். மேலும் அவர் தமிழ்நாட்டில் கூடுதலாக தேசிய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையங்கள் ஆகியன அமைக்கவும் கோரிக்கை வைத்தார்.

கேலோ இந்தியா பள்ளி விளையாட்டுப் போட்டிகள்

புதுடெல்லியில் உள்ள சர்வதேச விளையாட்டு அரங்கங்களில் நடத்தப்படும் 'கேலோ இந்தியா பள்ளி விளையாட்டுப் போட்டிகள்' ஜனவரி 31 முதல் பிப்ரவரி 8-ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதில், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, கையுந்து பந்து, ஹாக்கி, நீச்சல் உள்ளிட்ட 16 விளையாட்டுகள் நடைபெற உள்ளன. பல்வேறு மாநிலங்களில் இருந்து 17 வயதிற்கு உட்பட்ட மாணவ மாணவியர் கலந்துகொள்ளும் இந்தப் போட்டிகளில் தமிழ்நாட்டிலிருந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தலைமையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலர் தீரஜ் குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ரீட்டா ஹரீஷ் தக்கர், உள்ளிட்ட உயர் அலுவலர்கள், 186 மாணவ மாணவியர் கலந்து கொள்கின்றனர். இவர்களுடன் 41 பயிற்சியாளர்கள் மற்றும் மேலாளர்களும் கலந்து கொள்கின்றனர்.

போட்டியின் பலன்

இந்தப் போட்டிகளில் கலந்து கொள்வதன் மூலம் தமிழகத்தின் பள்ளி மாணவ மாணவியருக்கு சர்வதேச விளையாட்டு அரங்கங்களில் விளையாடுவதற்கான வாய்ப்பும், இதர மாநிலங்களைச் சேர்ந்த மாணவ மாணவியரோடு விளையாடுவதன் மூலம் தங்களது திறமைகளை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது. இது அவர்களை சர்வதேச மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் ஈடுபடச் செய்வதற்கு ஓரு ஊக்கு சக்தியாக அமையும்.

முதல் நாள் போட்டியில் தமிழகத்திற்கு தங்கம்

நேற்று நடைபெற்ற முதல் நாள் போட்டிகளில் தமிழக மாணவன் சி.பிரவீன், மாணவி கொலஷியா இருவரும் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கம் வென்றுள்ளனர். 1500 மீட்டர். ஓட்டப்பந்தயத்தில் மாதேஷ் என்ற மாணவனும், குண்டு எறிதலில் நெனால் சூசன் என்ற மாணவியும் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர். டிரிபிள் ஜம்ப் போட்டியில் சபிதா என்ற மாணவி வெண்கலம் வென்றுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x