Published : 01 Feb 2018 08:32 AM
Last Updated : 01 Feb 2018 08:32 AM

காலிப் பணியிடம் இருந்தாலும் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கை விசாரிக்க தனி நீதிபதி அமர்வு ஏற்படுத்தக் கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் (என்ஜிடி) வழக்குகளை விசாரிக்க தனி நீதிபதி அமர்வு ஏற்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தனி உறுப்பினரும் நீதிமன்ற பணிகளை மேற்கொள்ளும் வகையில் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என உச்ச நீதிமன்றத்தில் என்ஜிடி பார் அசோசியேஷன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “நாங்கள் மிகத் தெளிவாக கூறுகிறோம். தனி நீதிபதி அமர்வுகளை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று தெரிவித்தனர்.

“தேசிய பசுமை தீர்ப்பாயத்திலோ அல்லது அதன் மண்டல கிளைகளிலோ தனி நீதிபதி அமர்வு ஏற்படுத்தக் கூடாது என என்ஜிடி-யின் இடைக்கால தலைவருக்கு ஆலோசனை கூறுங்கள்” என்று அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் காலிப் பணியிடங்கள் அதிகமாக உள்ளன என்று அட்டர்னி ஜெனரல் கூறினார். என்றாலும் தனி உறுப்பினர் நீதிமன்ற பணிகளை மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

மனுதாரர் தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “தீர்ப்பாயத்தில் சட்ட அறிவு இல்லாத உறுப்பினர்களும் வழக்கில் முடிவு எடுக்கின்றனர்” என்றார். என்ஜிடி அமர்வுகளில் நீதித்துறை சார்ந்த உறுப்பினர் ஒருவரும், தொழில்நுட்ப உறுப்பினர் ஒருவர் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள் வழக்கை மார்ச் 12-க்கு ஒத்தி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x