Published : 01 Feb 2018 08:17 AM
Last Updated : 01 Feb 2018 08:17 AM

தனக்கு பதில் வேறு ஒருவர் இருப்பதை கண்டு 17 ஆண்டுக்கு பின் வீட்டுக்கு திரும்பிய இளைஞர் அதிர்ச்சி: ஆந்திராவில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்

வீட்டிலிருந்து சிறு வயதில் ஓடிப்போன இளைஞர் 17 ஆண்டுகளுக்கு பின்னர் சொந்த ஊருக்கு திரும்பினார். ஆனால் அங்கு, தனது ஸ்தானத்தில் வேறொருவர் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். சினிமாவை மிஞ்சும் இந்த உண்மை சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து இந்த குடும்பத்தின் நெருங்கிய உறவினரான ராம்பிரசாத் சிகாகோவிலிருந்து தனது சமூக வலைத்தளம் மூலம் தகவல்கள் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: மந்தலவாரி பள்ளி கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் ரகுநாத ரெட்டி. இவர் தனது மனைவி, மகன் மற்றும் மகளுடன் இந்த கிராமத்தில் வசித்து வந்தார். இவரது மகன் கடந்த 2000 வது ஆண்டில் 11 வயதில் வீட்டை விட்டு ஓடி போய் விட்டார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இந்தநிலையில், திருப்பதியில் உள்ள ஒரு ஓட்டலில் பணிபுரியும் சிறுவனை ரகுநாத ரெட்டி குடும்பத்தார் கண்டனர்.

அவன், ஓடிப்போன மகனின் சாயலில் இருந்தான். இதையடுத்து அவன்தான் தங்களுடைய மகன் என முடிவு செய்தனர். அந்த சிறுவன் மறுத்தாலும், அவனை தங்களது கிராமத்துக்கு அழைத்து சென்றனர்.

இந்நிலையில் சில வருடங்கள் கழித்து ரகுநாத ரெட்டி உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பம் பல பிரச்சினைகளை சந்தித்தது. இதனால் மனம் மாறிய ‘மகன்’ தான் அந்த குடும்பத்திற்காக உழைத்து தங்கைக்கு திருமணமும் செய்து வைத்தார். இதனிடையே, ஓடிப்போன உண்மையான மகன் 17 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்தார். அங்கு, தனது பெயரில் ஒருவர் மகனாக வசித்து வருவதை கண்டு அதிர்ச்சியானார்.

அப்போது, மகனாக வசித்து வந்தவரும், உண்மையான மகன் வந்ததால் வெளியேறுகிறேன் என்றார். இதனை கேட்ட உண்மையான மகன், தனது பெற்றோரையும், தங்கையையும் பார்க்க மட்டுமே வந்தேன். நீயே மகனாக இந்த வீட்டில் வசிக்கலாமென கூறினார்.

அதே நேரத்தில் தாயும், தங்கையும், எங்களுக்கு தந்தை ஸ்தானத்திலிருந்தும், மகனாக இருந்தும் கடமைகள் அனைத்தும் கஷ்டப்பட்டு நிறைவேற்றிய மகனே வேண்டும் என்றனர். இறுதியில் வளர்ப்பு மகன் வீட்டிலேயே இருக்க ஒப்புக்கொண்டதால் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x