Published : 01 Feb 2018 07:38 AM
Last Updated : 01 Feb 2018 07:38 AM
ஆப்கானிஸ்தானில் 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டது. பாகிஸ்தான், காஷ்மீர், டெல்லியிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஆப்கானிஸ்தானில் தஜிகிஸ்தானுடனான வடக்கு எல்லையில் இந்துகுஷ் மலைத்தொடர் உள்ளது. இந்த மலைத்தொடரில் 191 கி.மீ. ஆழத்தில் இந்திய நேரப்படி நேற்று மதியம் 12.36 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.2 ரிக்டர் ஆக பதிவாகியதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதை தொடர்ந்து வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து மக்கள் அலறியடித்து வெளியேறினர். அங்கு பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
அண்டை நாடுகளான பாகிஸ்தான், இந்தியாவிலும் இந்த நில நடுக்கம் தாக்கத்தை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானில் பலுசிஸ்தான், கைபர் பக்துன்கவா மாகாணங்களில் நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டது. குவெட்டா நகரில் பல வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் சிறுமி ஒருவர் உயிரிழந்தார், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தலைநகர் இஸ்லாமாபாத், பெஷாவர் மற்றும் லாகூர் நகரில் உள்ள பள்ளிகள், அலுவலகங்கள், மற்றும் வீடுகளில் இருந்து அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் மற்றும் பள்ளத்தாக்கின் பிற பகுதிகளில் இந்த நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். மின்சார விநியோகம் அதிகாரிகளால் உடனடியாக நிறுத்தப் பட்டது.
காஷ்மீரில் 2005-ல் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தை இது நினைவூட்டியதாக மக்கள் தெரிவித்தனர்.
தலைநகர் டெல்லியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. மெட்ரோ ரயில்கள் சிறிதுநேரம் நிறுத்தப்பட்டன. என்றாலும் மெட்ரோ ரயில் சேவைகள் பாதிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், ஆஜ்மீர் உள்ளிட்ட நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. எனி னும் பாதிப்பு குறித்த தகவல் இல்லை என போலீஸார் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT