Published : 06 Jan 2018 10:09 AM
Last Updated : 06 Jan 2018 10:09 AM

ஹஜ் யாத்திரை ஒதுக்கீடு பாரபட்சமானது: உச்ச நீதிமன்றத்தில் கேரளா வழக்கு- மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு

‘‘ஹஜ் யாத்திரை செல்வதற்கு மாநிலங்களுக்கு ஒதுக்கீடு அளிப்பது பாரபட்சமானது’’ என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் கேரள ஹஜ் கமிட்டி வழக்கு தொடுத்துள்ளது.

மாநிலங்களுக்கு ஹஜ் யாத்திரை ஒதுக்கீடு பாரபட்சமானது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் கேரள ஹஜ் கமிட்டி மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலை யில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள ஹஜ் கமிட்டி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் வாதாடியதாவது:

இந்தியாவில் இருந்து 1.7 லட்சம் ஹஜ் யாத்திரிகர்களை ஐக்கிய அரபு எமிரேட் அரசு ஆண்டுதோறும் அனுமதிக்கிறது. அந்த 1.7 லட்சம் யாத்திரிகர்களில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் முஸ்லிம்கள் மக்கள் தொகையின் அடிப்படையில் மத்திய அரசு ஒதுக்கீடு வழங்கி வருகிறது. உதாரணத்துக்கு பிஹார் மாநிலத்துக்கு 12,000 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த மாநிலத்தில் ஹஜ் யாத்திரை செல்ல 6,900 பேர் மட்டுமே விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள் ளனர்.

அதற்கு நேர்மாறாக கேரளாவுக்கு 6,000 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், கேரளாவில் இருந்து ஹஜ் யாத்திரை செல்ல 95,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதன் காரணமாக பிஹாரில் விண்ணப்பித்த அனைவரும் ஹஜ் யாத்திரை செல்லும் வாய்ப்பு பெறுகின்றனர். ஆனால், கேரளாவில் சூழ்நிலை விரும்பத்தக்கதாக இல்லை. எனவே, யார் யார் ஹஜ் யாத்திரை செல்வது என்பதை முடிவு செய்ய மாநில அடிப்படையில் ஒதுக்கீடு வழங்கும் நடைமுறைக்குப் பதில், தேசிய அளவில் ஒதுக்கீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும். தற்போதுள்ள நடைமுறை பாரபட்சமானது.

இவ்வாறு பிரசாந்த் பூஷண் வாதாடினார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதிடுகையில், ‘‘தற்போதுள்ள நடைமுறை சரியானதுதான். ஹஜ் யாத்திரை தொடர்பாக 31 மாநிலங்களின் ஹஜ் கமிட்டிகள் தெரிவித்த கருத்துகளை மத்திய ஹஜ் கமிட்டி தீவிரமாக பரிசீலித்த பின்னரே, ஒதுக்கீட்டு முறை கொண்டு வரப்பட்டுள்ளது’’ என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இதுகுறித்து 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x