Published : 06 Jan 2018 10:05 AM
Last Updated : 06 Jan 2018 10:05 AM
மாநிலங்களவையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இருக்கைக்கு சென்ற பிரதமர் மோடி அவருடன் கைகுலுக்கி சிறிது நேரம் பேசினார்.
மாநிலங்களவை கால வரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு நேற்று அறிவித்தார். பின்னர் வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட்டது. பாடல் முடிந்தவுடன் பிரதமர் நரேந்திர மோடி நேராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருக்கைக்கு சென்றார். அங்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் கைகுலுக்கி சிறிது நேரம் பேசினார். அதை பார்த்து மற்ற உறுப்பினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியன், காங்கிரஸ் மூத்த தலைவர் கரண் சிங் உட்பட சிலருடனும் பிரதமர் மோடி கைகுலுக்கினார். ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரிடமும் மோடி கைகுலுக்கி சிறிது நேரம் பேசியது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலின் போது மோடி தீவிர பிரச்சாரம் செய்தார். அப்போது, குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் சதி செய்கிறது. பாகிஸ்தானியர்கள் சிலரை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி உட்பட காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் சந்தித்தனர். அது ஏன் என்று மோடி குற்றம் சாட்டினார்.
இதனால் கோபம் அடைந்த காங்கிரஸார், மோடி பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். மன்மோகனும் மோடிக்குக் கடும் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. - பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT