Published : 10 Dec 2017 04:12 PM
Last Updated : 10 Dec 2017 04:12 PM
குஜராத் தேர்தலில் பாகிஸ்தானின் தலையீடு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரக்கூட்டம் ஒன்றில் சாடினார். அண்டை நாட்டுத் தலைவர்களை காங்கிரஸ் கட்சியின் முன்னணியினர் சிலர் சந்தித்ததாக எழுந்த செய்திகளை குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பலன்பூரில் தேர்தல் கூட்டமொன்றில் பேசிய மோடி, பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் தலைமை இயக்குநர் சர்தார் அர்ஷத் ரபீக், மூத்த காங்கிரஸ் தலைவர் அகமது படேல் குஜராத் முதல்வராக வேண்டும் என்று கூறியதாக எழுந்த செய்திகளை குறிப்பிட்டு, காங்கிரஸ் கட்சியை நோக்கி கேள்விகளை எழுப்பினர்.
“மணிசங்கர் ஐயர் வீட்டில் கூட்டம் ஒன்று நடந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் பாகிஸ்தான் தூதரக அதிகாரி, பாகிஸ்தான் முன்னாள் அயலுறவு அமைச்சர், இந்தியாவின் முன்னாள் துணை குடியரசுத் தலைவர், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் கலந்து கொண்டதாக செய்திகள் வெளியாகின. இவர்கள் சுமார் 3 மணி நேரம் ஆலோசித்துள்ளனர்.
இதற்கு அடுத்த நாள் மணி சங்கர ஐயர், மோடி வெறுக்கத்தக்கவர் என்கிறார், இது மிகவும் சீரியசான விஷயம்.
ஒரு புறம் பாகிஸ்தான் முன்னாள் ராணுவ டி.ஜி. குஜராத் தேர்தலில் தலையிட்டு அகமது படேல் முதல்வராக வேண்டும் என்கிறார், இன்னொரு புறம் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் மணி சங்கர ஐயர் வீட்டில் கூடுகின்றனர். அந்தக் கூட்டத்துக்குப் பிறகே குஜராத் மக்கள், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், ஏழை மக்கள், மோடி ஆகியோர் காயப்படுத்தப்பட்டனர். இது போன்ற சம்பவங்கள் சந்தேகங்களை எழுப்பும் என்று உங்களுக்குத் தெரியவில்லையா?
இந்த விவகாரம் என்ன, எதற்காக இந்தக் கூட்டம் என்பதை நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தெரிவித்தாக வேண்டும்.
இவ்வாறு பேசினார் மோடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT