Last Updated : 10 Dec, 2017 09:28 AM

 

Published : 10 Dec 2017 09:28 AM
Last Updated : 10 Dec 2017 09:28 AM

மாயாவதிக்கு ஆதரவாக பேசியவர் தற்போது மவுனம்: லாலு மீது சரத் யாதவ் ஆதரவாளர்கள் புகார்

மாயாவதி தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தபோது, அவரை மீண்டும் எம்.பி.யாக்க உதவுவேன் என்று லாலு பிரசாத் யாதவ் அறிவித்தார். ஆனால் அதுபோல் சரத் யாதவுக்கு உதவ முன்வரவில்லை என்று லாலு மீது புகார் எழுந்துள்ளது.

பிஹாரில் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் இணைந்து மெகா கூட்டணி அமைத்தன. இதன் சார்பில் முதல்வரான நிதிஷ் குமார் கடந்த ஜூலையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். பிறகு பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து முதல்வரானார். இதை கடுமையாக எதிர்த்த ஐக்கிய ஜனதாதள மூத்த தலைவர் சரத் யாதவும் அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.மேலும், சரத் யாதவ், அவரது ஆதரவாளர் அலி அன்வர் அன்சாரி ஆகியோரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கடந்த திங்கள்கிழமை பறிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் லாலு மீது சரத் யாதவ் ஆதரவாளர்கள் புகார் கூறியுள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, நாடாளுமன்றத்தில் தனக்கு பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று கூறி மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது அவருக்கு ஆதரவாக பேசிய லாலு, பிஹாரில் இருந்து தனது கட்சி மூலம் மாயாவதியை மீண்டும் மாநிலங்களவைக்கு அனுப்பத் தயார் என்றார். ஆனால் சரத் யாதவ் விவகாரத்தில் லாலு மவுனமாக இருந்துவிட்டார் என்று கூறுகின்றனர்.

இது குறித்து சரத் யாதவின் ஆதரவாளர்கள் ‘தி இந்து’விடம் கூறும்போது, “அதிருப்தி எம்.பி.க்கள் தொடர்பாக பல்வேறு கட்சிகள் அளித்த புகார்கள் நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ளன. ஆனால் நிதிஷ் குமாரின் புகாரில் மட்டும் மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு உடனடி நடவடிக்கை எடுத்து, சரத் யாதவ், அலி அன்வர் ஆகியோரின் பதவியை பறித்துள்ளார். இதை லாலு உட்பட எந்தக் கட்சியினரும் கண்டிக்கவில்லை. லாலுவுக்கு எம்எல்ஏக்கள் குறைவாக இருந்தபோது அவரது மனைவி ராப்ரிதேவி, மகள் மிசாபாரதி ஆகியோரை மாநிலங்களவைக்கு அனுப்ப சரத் யாதவ் உதவியுள்ளார். ஆனால் மாயாவதிக்கு உடனடியாக ஆதரவு தெரிவித்த லாலு, சரத் யாதவ் விவகாரத்தில் முன்வராதது ஏன்” என்று தெரிவித்தனர்.

பிஹாரில் நடைபெறவிருக்கும் மாநிலங்களவைக்கான தேர்தலில் லாலு கட்சி சார்பில் 2 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது. இப்பதவிக்கு லாலுவின் மனைவி ராப்ரி, கட்சியின் மூத்த தலைவர் ரகுவன்ஷ் பிரசாத் நிறுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டவர்களில் அலி அன்வரின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் உள்ளது. ஆனால் 2014-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட சரத் யாதவுக்கு இன்னும் சில ஆண்டுகள் பதவிக் காலம் உள்ளது. பதவி நீக்கத்துக்கு எதிராக இருவரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x