Published : 09 Jul 2017 09:22 AM
Last Updated : 09 Jul 2017 09:22 AM
ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி புர்ஹான் வானியின் முதலாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, காஷ்மீரின் 3 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பிரிவினைவாதிகளின் பேரணியை தடுக்க எல்லா இடங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
பாகிஸ்தான் ஆதரவு ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின், காஷ்மீர் பிரிவு கமாண்டராக இருந்தவர் புர்ஹான் வானி. பாதுகாப்புப் படையினரின் என்கவுன்ட்டர் நடவடிக்கையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 8-ம் தேதி புர்ஹான் பலியானார். அவருடைய முதலாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, காஷ்மீர் பிரிவினைவாதிகள் நேற்று பேரணிக்கு அழைப்பு விடுத்தனர்.
ஹூரியத் மாநாட்டு பிரிவினைவாத அமைப்பின் சயத் அலி ஷா ஜிலானி மற்றும் மிர்வெய்ஸ் உமர் பரூக், யாசின் மாலிக் ஆகியோர், ‘புர்ஹான் வானியின் சொந்த ஊருக்கு பேரணியாக வந்து அவருக்கு அஞ்சலி செலுத்துங்கள்’ என்று பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தனர்.
சட்டம் ஒழுங்கை காப்பாற்ற நேற்று காஷ்மீரின் எல்லா பகுதிகளிலும் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. அத்துடன் காஷ்மீரின் மற்ற எல்லா பகுதிகளிலும் மக்கள் நடமாட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நேற்று நடப்பதாக இருந்த பல் கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப் பட்டன. பள்ளிகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டன. போக்குவரத்தும் முடங்கியது. மாநில போலீஸார் மற்றும் துணை ராணுவ வீரர்கள் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். பிரிவினைவாதிகள் போராட்டம் அறிவித்ததால், காஷ்மீரின் பல பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை நேற்று முடங்கியது.
தடை மீறி ஊர்வலம்
தெற்கு காஷ்மீரில் 4 இடங்களில் ஊரடங்கு உத்தரவை மீறி பொதுமக்கள் ஊர்வலம் செல்ல முயன்றனர். அப்போது புர்ஹான் வானி மற்றும் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். அப்போது, ராணுவ வீரர்கள் மீது கல்வீசி ஒரு பிரிவினர் தாக்குதலில் ஈடுபட்டனர். நிலைமையை சமாளிக்க துணை ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகள் வீசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT