Published : 26 Jan 2015 12:19 PM
Last Updated : 26 Jan 2015 12:19 PM
தலைமைத் தேர்தல் ஆணையர் எச்.எஸ்.பிரம்மா கூறியிருப்பதாவது:
நாட்டில் உள்ள தகுதியான ஒவ்வொருவருக்கும் வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஆதார் தகவல்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் ஒன்றிணைக்க முடிவு செய்துள்ளோம். இதை நாம் செய்து முடித்துவிட்டால் நமது வாக்காளர் பட்டியலில் 100 சதவீத உண்மைத் தன்மையைக் கொண்டு வந்துவிட முடியும்.
ஆதார் தகவல்களும், வாக்காளர் அடையாள அட்டையும் ஒன்றிணைகிற போது குறிப்பிட்ட நபரின் பெயர், அவரின் பயோமெட்ரிக் (உடல்சார்) தகவல்கள் மற்றும் முகவரி ஆகியவை சரியான நேர்க்கோட்டில் வந்துவிடும். பின்னர் வாக்காளர் பட்டியலில் எந்தத் தில்லுமுல்லுகளும் நேராது. இந்தப் பணியைச் செய்து முடிக்க எட்டு முதல் ஒன்பது மாதங்கள் ஆகலாம். அல்லது 2016ம் ஆண்டின் ஆரம்பத்தில் இதனை முடித்துவிடுவோம்.
வாக்களிப்பது என்பது ஒவ்வொரு குடிமகனின் தார்மீகக் கடமை ஆகும். நாட்டில் உள்ள 84 கோடி வாக்காளர்களில் 55 கோடி வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்கிறார்கள். மீதமுள்ள 30 கோடி பேர் பல்வேறு காரணங்களால் வாக்களிப்பதில்லை.
நீங்கள் (மக்கள்) ஒரு நல்ல தலைவரைத் தேர்வு செய்யும்போது, அவர் நம் எல்லோருக்காகவும் உழைப்பார். நீங்கள் வாக்களிக்காத பட்சத்தில், நாட்டில் நடைபெறும் நல்லது மற்றும் கெட்டதுகளுக்கு அரசை நீங்கள் குறைகூற முடியாது. ஆக, ஒரு நல்ல அரசு அமையாமல் போவதற்கு நாம்தான் பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT