Published : 01 Aug 2015 09:55 AM
Last Updated : 01 Aug 2015 09:55 AM

லிபியாவில் கடத்தப்பட்ட 4 இந்தியர்களில் 2 பேர் விடுவிப்பு

லிபியாவில் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 4 இந்தியப் பேராசிரியர்கள் கடந்த புதன்கிழமை ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். அவர்களில் 2 பேர் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பலராம், கோபி கிருஷ்ணா ஆகிய இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக லிபியா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

கர்நாடகாவை சேர்ந்த லட்சுமி காந்த், விஜயகுமார் ஆகியோர் அதே பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை இவர்கள் நான்கு பேரும் இந்தியா செல்ல விமானம் நிலையத்துக்கு புறப்பட்டனர். அப்போது, லிபிய தலைநகர் திரிபோலியில் இருந்து 4 பேரும் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். இதையடுத்து இந்திய உள்துறை அமைச்சகம், லிபிய தூதரக அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்கும்படி கோரியது. இவ்விவகாரத்தை வெளியுறவு அமைச்சகமும் தொடர்ந்து கண்காணித்து வந்தது.

இந்நிலையில், தீவிரவாதிகளுடன் லிபியா அரசு நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. கடத்தப்பட்ட இந்தியர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என தீவிரவாத அமைப்பு சார்பில் உறுதி அளிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. நேற்று மாலை கர்நாடக மாநிலத்தை சேர்ந்த விஜயகுமார், லட்சுமிகாந்த் ஆகிய இருவரை தீவிரவாதிகள் விடுவித்தனர்.

இவர்களை லிபிய தூதரக அதிகாரிகள் அவர்கள் பணியாற்றும் பல்கலை வளாகத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று ஒப்படைத்தனர். பலராம், கோபி கிருஷ்ணா ஆகிய இருவரும் விரைவில் விடுவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x