Published : 03 Oct 2013 08:33 AM
Last Updated : 03 Oct 2013 08:33 AM

லாலு பிரசாத் யாதவுக்கு இன்று தண்டனை விவரம் அறிவிப்பு

கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவரும் பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவுக்கு இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்படுகிறது.

தண்டனை விபரங்களை லாலு சிறையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் அறிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவருக்கு குறைந்தது 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. லாலு பிரசாத்திற்கு தண்டனை அறிவிக்கப்பட்ட உடன், அவரது எம்.பி. பதவி பறிக்கப்படும் நிலையும் உருவாகியுள்ளது.

அண்மையில், குற்றவழக்குகளில் 2 ஆண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கால சிறைத் தண்டனை பெறும் எம்எல்ஏ, எம்.பி.க்களின் பதவியை தீர்ப்பு வழங்கப்பட்ட உடனேயே பறிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனை அடுத்து குற்ற வழக்கில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு ஒரு அவசர சட்ட மசோதாவை நிறைவேற்றியது. ஆனால், இந்த மசோதா முட்டாள்தனமானது என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். இதனையடுத்து, குற்ற வழக்கில் தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.க்களை பதவி பறிப்பு நடவடிக்கையிலிருந்து காப்பாற்றும் நோக்கில் கொண்டு வரப்பட்ட சர்ச்சைக்குரிய அவசரச் சட்டம் வாபஸ் பெறப்படுகிறது. அது தொடர்பான மசோதாவும் விலக்கிக் கொள்ளப்படுகிறது.

இதனால் கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. ஜெகதீஷ் சர்மா உள்ளிட்டோர் பதவி இழக்கும் நிலை உருவாகி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x