Published : 30 Dec 2016 10:13 AM
Last Updated : 30 Dec 2016 10:13 AM

ரூ.60 கோடி பழைய ரூபாயை மாற்றியதாக புகார் டெல்லி வழக்கறிஞர் ரோஹித் தாண்டன் கைது

ரூ.60 கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை சட்டவிரோதமாக மாற்றியதாக புகார் எழுந்ததையடுத்து, டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ரோஹித் தாண்டனை அமலாக்கத் துறை நேற்று கைது செய்தது.

கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் பரஸ் மால் லோதா மற்றும் கோடக் மஹிந்திரா வங்கியின் டெல்லி கஸ்துர்பா காந்தி மார்க் கிளை மேலாளர் ஆஷிஷ் குமார் ஆகியோர் மூலம் ரோஹித் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முயற்சி செய்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக லோதாவும் குமாரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனர்.

ரூ.38 கோடி மதிப்பிலான பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்றித் தருவதற்காக, குமாருக்கு ரோஹித் ரூ.13 கோடி கமிஷன் வழங்கியதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டி உள்ளது.

அதாவது, வங்கி மேலாளர் குமார், பழைய ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு 84 கேட்புக் காசோலைகளை (டிடி) வழங்கி உள்ளார். இதை ரத்து செய்துவிட்டு புதிய பணமாக மாற்றிக்கொள்ள ரோஹித் திட்டமிட்டிருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வருமான வரித்துறை அதிகாரிகள், ரோஹித்துக்கு சொந்தமான இடத்தில் சோதனை நடத்தியதில் ரூ.13.5 கோடி ரொக்கத்தைக் கைப்பற்றினர். மேலும் அந்த டிடிகளை ரத்து செய்து, அந்தப் பணம் வருமான வரித் துறையின் கணக்குக்கு மாற்றப்பட்டது.

இந்தப் பணம் முழுவதும் தன்னுடையதுதான் என ரோஹித் கூறி வருகிறார். ஆனால், வேறு யாராவது இவர் மூலம் கறுப்புப் பணத்தை மாற்ற முயற்சி செய் தார்களா என அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில், டெல்லி போலீஸார் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஓம் பிரகாஷ் கோயலை கைது செய்தனர். இந்நிலையில், ரோஹித்தை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.

வைரம், ரூபி பறிமுதல்

ரோஹித்துக்கு மட்டுமல்லாது சென்னையில் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டிக்கும் பழைய ரூபாயை மாற்றிக் கொடுத்த புகாரின் பேரில் லோதா ஏற்கெனவே கைது செய் யப்பட்டார். இதனிடையே, அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தினர். இதில் சுவிஸ் வங்கிக் கணக்கு உட்பட சில ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவருக்கு சொந்தமான ஒரு வங்கி லாக்கரை சோதனையிட்டனர். இதில் இருந்த வைரம், ரூபி மற்றும் நகைகளை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இதன் மதிப்பு பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அவருக்கு சொந்தமான 2 வங்கி லாக்கர்களை சோதனையிடவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x