Last Updated : 16 Sep, 2016 10:44 AM

 

Published : 16 Sep 2016 10:44 AM
Last Updated : 16 Sep 2016 10:44 AM

ரயில்வே பட்ஜெட்டை இணைக்க தீவிரம்: இனி ஜனவரி 31-ல் பொது பட்ஜெட்: மத்திய அமைச்சரவை அடுத்த வாரம் பரிசீலனை

பொது பட்ஜெட்டை இனி ஜனவரி 31-ல் தாக்கல் செய்வது குறித்தும், பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டை இணைப்பது குறித்தும் மத்திய அமைச்சரவை அடுத்த வாரம் பரிசீலிக்கும் என்று தெரிகிறது.

இப்போது பிப்ரவரி மாதத்தில் ரயில்வே, பொது பட்ஜெட் தனித்தனியாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன. இந்த நடைமுறையில் சில திருத்தங்களை செய்ய மத்திய நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம் ரயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யும் நடைமுறைக்கு முடிவுக்கட்டப்படும்.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 3 அல்லது 4-வது வாரம் பட்ஜெட் கூட்டத் தொடர் கூடுவது வழக்கம். இந்த மாதத்தின் இறுதி நாளில் (28 அல்லது 29) பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதனால் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைக்க மே மாதம் வரை ஆவதால், பட்ஜெட் அம்சங்களை நிதியாண்டு தொடக்கம் (ஏப்ரல் 1) முதல் அமல்படுத்த முடியாத நிலை உள்ளது.

எனவே, இனி வரும் காலங்களில் பட்ஜெட் தொடர்பான அனைத்து பணிகளையும் மார்ச் 31-க்குள் முடித்துவிட்டு, ஏப்ரல் 1 முதல் பட்ஜெட் அம்சங்களை அமல் படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக, பட்ஜெட் கூட்டத் தொடரை ஒரு மாதம் முன்னதாக (ஜனவரி 24) கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30-ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கையும் 31-ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

பட்ஜெட் இணைப்பு மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடரை முன்கூட்டியே தொடங்குவது குறித்து அடுத்த வாரம் மத்திய அமைச்சரவை கூடி ஆலோசனை நடத்தும் எனத் தெரிகிறது.

இதுதவிர, சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதால், அதுதொடர்பான பல்வேறு நடைமுறைகளை முன்கூட்டியே முடிப்பதற்கு ஏதுவாக, நாடாளு மன்ற குளிர்கால கூட்டத் தொடரை 15 நாட்கள் (நவம்பர் 12) முன்கூட்டியே கூட்டப்படும் எனத் தெரிகிறது. வழக்கமாக நவம்பர் 3 அல்லது 4-வது வாரம் இந்த கூட்டத்தொடர் தொடங்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x