Published : 18 Jan 2017 10:00 AM
Last Updated : 18 Jan 2017 10:00 AM
பஞ்சாபில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் யார் என்பதை சோனியா காந்தியே முடிவு செய்வார் என, மாநில காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங் கூறியுள்ளார்.
பஞ்சாபில் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் பிப்ரவரி 4-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்க உள்ளது. பாட்டியாலா நகரத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட அக்கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் முதல்வருமான அமரீந்தர் சிங் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அப்போது, காங்கிரஸ் சார்பில் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘நான் முதல்வர் வேட்பாளரா என்பது எனக்கு தெரியாது. எதுவாக இருந்தாலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே முடிவு செய்வார்’ என்றார்.
காங்கிரஸில் மீண்டும் இணைந் துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்துவை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. நேற்று முன்தினம் டெல்லியில் சித்து காங்கிரஸில் இணைந்த விழாவில் அமரீந்தர் சிங் பங்கேற்கவில்லை.
இதனால், முதல்வர் வேட்பாளர் அந்தஸ்த்தைப் பெற இருவருக்கும் இடையே போட்டி நிலவுவதாக செய்திகள் வெளியாகின்றன. ஆனால், இதனை மறுத்த அமரீந்தர் சிங், ‘தேர்தலுக்கு 12-14 நாட்களே உள்ளன. பஞ்சாபில் பிரச்சாரம் செய்வேனா, டெல்லிக்கு போவேனா? தேர்தல் பிரச்சாரத்தில் நான் இருந்தாக வேண்டும். எதற்காக தேவையில்லாமல் குழப்பம் விளைவிக்கிறீர்கள். முதல்வர் வேட்பாளர் தொடர்பாக சித்துவுடன் எந்த உடன்பாடும் கட்சிக்கு இல்லை’ என்றார்.
பாட்டியாலா மட்டுமின்றி, முதல்வர் பிரகாஷ் சிங் பாதலுக்கு எதிராக லாம்பி தொகுதியிலும் அமரீந்தர் சிங் போட்டியிடுகிறார். லாம்பியில் பிரகாஷ் சிங் பாதலின் வெற்றிக்கு மறைமுகமாக உதவும் நோக்கிலேயே அமரீந்தர் போட்டி யிடுவதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டி வருகிறார்.
இதுகுறித்து அமரீந்தரிடம் கேட்டபோது, ‘பாட்டியாலா என் சொந்த தொகுதி. இது எனக்கு கடைசி தேர்தல். எனவே, தொடங்கிய இடத்தில் முடிக்க பாட்டியாலாவில் நிற்கிறேன். பாதல் குடும்பத்தினர் பஞ்சாபை எப்படியெல்லாம் சூறையாடினார் கள் என்பதை மக்களுக்கு உணர்த்தவே, லாம்பியில் பிரகாஷ் சிங் பாதலை எதிர்த்து நிற்கிறேன்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT