Published : 26 Jan 2015 10:26 AM
Last Updated : 26 Jan 2015 10:26 AM
மீண்டும் இந்தியாவுக்கு வருவதற்கான வாய்ப்பு கிடைத்ததை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று குடியரசு தினவிழாவில் பங்கேற்பதற்காக 3 நாள் பயணமாக நேற்று காலை 9.50 மணிக்கு டெல்லியில் உள்ள பாலம் விமானப்படை தளத்துக்கு வந்தடைந்தார் ஒபாமா. அவருடன் மனைவி மிஷெல் ஒபாமா மற்றும் அரசு அதிகாரிகள் குழுவினர் வந்துள்ளனர்.
‘ஏர் போர்ஸ் ஒன்’ விமானத்தில் வந்த ஒபாமா தம்பதியை, பிரதமர் நரேந்திர மோடி மரபை மீறி விமான நிலையத்துக்கே நேரில் சென்று வரவேற்றார். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டனர்.
பின்னர் அமெரிக்காவிலிருந்து வரவழைக்கப்பட்ட குண்டு துளைக்காத ‘பீஸ்ட்’ காரில் ஒபாமா தம்பதி தாங்கள் தங்க இருக்கும் ஐடிசி மவுரியா ஓட்டலுக்கு சென்றனர். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு குடியரசுத்தலைவர் மாளிகைக்கு சென்றனர். அங்கு பாரம்பரிய முறைப்படி 21 குண்டுகள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் ஒபாமாவை வரவேற்றனர். அப்போது, இந்திய பாரம்பரியப்படி இரு கைகளையும் மடக்கியபடி ‘நமஸ்தே’ என வணக்கம் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஒபாமா கூறும்போது, “மீண்டும் இந்தியாவுக்கு வருவதற்கான வாய்ப்பு கிடைத்ததை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். சிறப்பான வரவேற்பு கொடுத் தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
முதல் அதிபர்
நமது குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையைப் பெற உள்ளார் ஒபாமா. மேலும் 2-வது முறையாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT