Published : 30 Jan 2017 03:32 PM
Last Updated : 30 Jan 2017 03:32 PM
பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் வெளியிடப்படுவதற்கு அனைத்துக் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தன.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மட்டும் எதிர்ப்புக்குக் காரணமாக அல்லாமல், மூன்றாவது காலாண்டு பொருளாதார தரவுகள் இல்லாததும் எதிர்ப்புக்குக் காரணமாக அவர்கள் முன்வைத்தனர்.
மத்திய பட்ஜெட் குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. பிரதமர் நரேந்திர மோடியும் கூட, கட்சிக் கொள்கை, நலன்களைக் கடந்து மக்களைவை நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
“மக்களவைதான் ‘மகாபஞ்சாயத்து’ இதில் அனைத்துக் கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என்று பிரதமர் கூறியிருந்தார்.
ஆனால் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சிவசேனா ஆகியவை கலந்து கொள்ளவில்லை. உள்ளாட்சி தேர்தல்கள் மற்றும் சில மாநில சட்டப்பேரவை தேர்தல்களே இக்கட்சிகள் கலந்து கொள்ளாததற்குக் காரணம் என்று நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த் குமார் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரி கூறும்போது, “5 மாநில தேர்தல்கள் மட்டும் பட்ஜெட் தாக்கல் காலநேரத்தை கேள்விக்குட்படுத்துவதாக இல்லை, 3-ம் காலாண்டு பொருளாதார தரவுகள் இந்த பட்ஜெட் விவரங்களில் சேர்க்க முடியாமல் போகும். காரணம் பணமதிப்பு நீக்கம் பொருளாதாரத்தில் சீரழிவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, எனவே அதன் தாக்கத்தை அறிய 3-ம் காலாண்டு பொருளாதார தரவுகள் அவசியம். இதனால் பட்ஜெட் இதன் தாக்கத்தை பிரதிபலிக்கப் போவதில்லை” என்று விமர்சித்தார்.
காங்கிரஸ் கட்சியின் ஜோதிர் ஆதித்ய சிந்தியா கூறும்போது, “இந்தக் கூட்டத்தொடரில் 9 நாட்கள் இருந்தாலும் இதில் 5 நாட்கள் குடியரசுத்தலைவர் உரையின் மீதான நன்றி தெரிவிப்பு தீர்மானம் நடைபெறும். ஆனாலும் பணமதிப்பு நீக்கம், எல்லையில் அடிக்கடி நிகழும் போர் நிறுத்த ஒப்பந்த அத்துமீறல்கள், ஆர்பிஐ-யின் தனித்துவத்தை முடக்கும் செயல்பாடுகள் குறித்து நாங்கள் விவாதம் கோரியுள்ளோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT