Published : 06 Oct 2016 10:06 AM
Last Updated : 06 Oct 2016 10:06 AM
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்தியாவுக் குள் ஊடுருவ 100 தீவிரவாதிகள் காத்திருக்கின்றனர் என்ற உளவுத் தகவலை பிரதமர் மோடியிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
பஞ்சாபின் பதான்கோட், காஷ்மீரின் உரி ராணுவ முகாம் களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அவற்றுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த மாதம் 28-ம் தேதி நள்ளிரவு இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தினர். இதில் 40-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக முதல் தகவல் வெளியானது.
அதன்பின், இந்திய எல்லைப் பகுதியில் சண்டை நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது.
இந்தக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு, சர்வதேச எல்லைப் பகுதி மற்றும் கடலோர பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அங்குள்ள சூழ்நிலைகள், ராணுவ வீரர்களின் கண்காணிப்பு உட்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் மோடிக்கு எடுத்துரைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக அமைச்சரவைக் கூட்டம் நடப்பதற்கு முன்னர் பிரதமர் மோடியை தோவல் சந்தித்து பேசியுள்ளார். அப்போது காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி இந்திய பகுதிக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் தயாராக காத்திருக்கின்றனர். பல்வேறு உளவு அமைப்புகளின் தகவல்கள் அதை உறுதி செய்துள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அஜித் தோவல் எடுத்துரைத்துள்ளார்.
புலனாய்வு தகவல்கள் குறித்து அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி விரிவாக ஆலோசனை நடத்தி உள்ளார். அடுத்தகட்டமாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை கள் குறித்தும் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT